திரைக் கதிர்

2021-ஆம் ஆண்டில் சுட்டுரையில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் யார் என்ற விவரம் தற்போது வெளிவந்துள்ளது.
திரைக் கதிர்

2021-ஆம் ஆண்டில் சுட்டுரையில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் யார் என்ற விவரம் தற்போது வெளிவந்துள்ளது. இதில் 2021 - ஆம் ஆண்டு சுட்டுரையில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தில் உள்ளார்.

அவரை அடுத்து சூர்யா 4-ஆவது இடத்திலும், ரஜினிகாந்த் 7- ஆவது இடத்திலும், தனுஷ் 9- ஆவது இடத்திலும், அஜித் 10 - ஆவது இடத்திலும் உள்ளனர்.  அதேபோல் 2021- ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகளில் முதலிடத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளார். அவரை அடுத்து பூஜா ஹெக்டே, சமந்தா, காஜல் அகர்வால், மாளவிகா, ரகுல்பிரீத் சிங், சாய்பல்லவி, தமன்னா, அனுஷ்கா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர். 

---------------------------------

பாலிவுட்டில் "மிஷன் மஞ்சு' என்ற படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்த ராஷ்மிகா, தற்போது அமிதாப்பச்சனுடன் "குட்பை' படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனால் அங்கும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உருவாகி உள்ளது. இதனால் ஓய்வின்றி படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, ஓய்வெடுக்க பாரீசுக்கு பறந்துவிட்டார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதில், "பாரிஸில் எனது முதல் நாள் இப்படித்தான் இருந்தது. என்ன நடந்தது என்பதை குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு சொல்வதை விட, எனது பாரிஸ் பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களின் மூலம் சொல்ல நினைத்தேன்' என பதிவிட்டுள்ளார்.கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா. தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

---------------------------------

"எதற்கும் துணிந்தவன்' படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கி வரும் இந்தப் படம் வருகிற பிப்ரவரியில் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் "வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இயக்குநர் வெற்றிமாறன் தற்போது "விடுதலை' படத்தின் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். வெற்றிமாறன் படத்துக்கு முன்னதாக இயக்குநர் பாலா படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டிருக்கிறார். இந்தப் படத்துக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் பாலா கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். எழுத்துப் பணிகள் முடிவடைந்த பிறகே இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாலாவின் இயக்கத்தில் உருவான "பரதேசி' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com