(நாகர்கோவில் வடசேரி சந்தையில் பழ வியாபாரியும், வாடிக்கையாளரும்)
""போன வாரம் உங்க கிட்ட வாங்கிட்டுப் போன வாழைப்பழம் இனிக்கவே இல்ல. மாவு போல இருந்தது''
""சுகர் ஃப்ரீ பழத்தை தந்துட்டேன் போல. உங்களுக்கு சுகர் கிடையாதுன்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே அண்ணாச்சி''
சு.நாகராஜன், பறக்கை.
(திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருவர்)
""கரோனா பாதிப்பால், நீ 28 நாள்கள் தனிமைப்படுத்திக்கிட்டியா? 14 நாள்கள் இருந்தாலே போதுமே?''
"" நீ வேறே... வூட்ல அவ நச்சரிப்பு அப்படி''
அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி-21.
(சேலம் பேருந்துநிலையம் அருகே நின்றிருந்த ஓர் ஆட்டோவின் பின்புறத்தில்)
ஹீட்டர் இல்லாத மீட்டர் அழகி
வெ.சென்னப்பன்,
எல்லப்புடையாம்பட்டி.
(நாகர்கோவில் வடசேரி பேருந்துநிலையம் அருகே ஓர் உணவகத்தின் பெயர்)
ஹோட்டல் கை மணம்
கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.
(விழுப்புரத்தில் ஒரு காரில்)
தமிழரிடமாவது தமிழில் பேசுங்கள்.
கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.
(மயிலாடுதுறை - கல்லணை சாலையில் உள்ள ஒரு கடையின் பெயர்)
மிஸ்டர் மன்னிப்பு மளிகை
சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
யோசிக்கிறாங்கப்பா!
உன் குறைகளை விரோதி பிறரிடம் சொல்வான்;
நண்பன் உன்னிடம் சொல்வான்!
பி. கோபி, கிருஷ்ணகிரி -1.
மைக்ரோ கதை
ராமநாதனைப் பரிசோதித்த டாக்டர் ரொம்பவும் ஆச்சரியத்துடன் சொன்னார்:
"" சர்க்கரை எல்லாம் ரொம்ப நார்மலா இருக்கே... எப்படி?''
இராமநாதன் கொஞ்சம் யோசித்தான். வழக்கமான உணவு. வழக்கமான வேலை. என்ன மாறுதல்? அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்த மாறுதல் ஒன்று திடீரென மனதில் தோன்றவே டாக்டரிடம் அவன் சொன்னான்:
""பெட்ரோல் விலை ஏறினதுதான் காரணம் டாக்டர்'' என்றான்.
""பெட்ரோல் விலை ஏறினதுக்கும் உங்க உடம்பில் சுகர் நார்மல் ஆனதுக்கும் என்ன சம்பந்தம்? முழங்காலும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுற மாதிரியில்ல இருக்கு'' என்று சந்தேகத்துடன் கேட்டார்.
""இல்லைங்க டாக்டர். முதல்ல எல்லாம் வேலைக்குப் போகணும்னா டூ வீலர்ல போவேன். பெட்ரோல் விலை ஏறினதால வண்டியை வீட்டுல வச்சிட்டு டெய்லி 6 கிலோ மீட்டர் நடந்து ஆபிசுக்குப் போய்ட்டு வர்றேன். தினமும் நடக்குறதனால நல்ல உடற்பயிற்சி'' என்றான்.
எஸ்.சத்யா ரவி,
கம்பைநல்லூர்.
உன் குறைகளை விரோதி
பிறரிடம் சொல்வான்;
நண்பன் உன்னிடம் சொல்வான்!
பி. கோபி, கிருஷ்ணகிரி -1.
செவில்லி - ஸ்பெயின் நாட்டில் உள்ள இந்த நகரத்தின் ஒவ்வொரு வீட்டு வாசலின் முன்பாகவும் ஆரஞ்சு மரங்கள் உள்ளன. சுமார் 48 ஆயிரம் ஆரஞ்சு மரங்கள் எல்லாச் சாலைகளிலும் உள்ளன. மக்கள் பறித்துப் பயன்படுத்தியது போக அழுகிப் போன ஆரஞ்சு பழங்கள் சாலையில் விழுந்து வாகனங்களின் சக்கரங்களில் பட்டு நசுங்கிப் போகின்றன. தெருவில் நடந்து செல்வதற்கே இடைஞ்சலாக இந்த பழங்கள் கிடக்கின்றன.
இந்த நகரத்தில் உள்ள எமாசெசா என்ற நகராட்சி நீர் நிறுவனம் அழுகிப் போன ஆரஞ்சுப் பழங்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது. இதற்காக 35 ஆயிரம் டன் ஆரஞ்சுப் பழங்களை அது சேகரித்து வைத்துள்ளது. இந்த பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி, இந்நகரின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்க தற்போது அது திட்டமிட்டுள்ளது.
அழுகிப் போன ஆரஞ்சுப் பழங்களில் இருந்து வெளிவரும் மீதேன் வாயுவை
மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை இதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
இந்நகரில் கிடைக்கும் ஆரஞ்சுப் பழங்களை வைத்து 73 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
ஆரஞ்சு பழங்களைச் சேகரிக்க செவில்லி நகராண்மைக் கழகம் 200 நபர்களை நியமித்துள்ளது.
என்.ஜே.,
சென்னை-58.