திரைக்கதிர்

பல கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிள்  பயணம் செல்வது அஜித்துக்கு பிடித்தமான ஒன்று.  
திரைக்கதிர்

பல கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிள்  பயணம் செல்வது அஜித்துக்கு பிடித்தமான ஒன்று.   "வலிமை' படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவுக்குச் சென்றபோது, அங்கு பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்தார்.  அதற்கு முன்பாக இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் கிராமங்களுக்குச் சென்று வந்தார். பிறகு மத்திய பிரதேசத்திலும் பயணம் மேற்கொண்டார். 

இந்த நிலையில் கடந்த 20  நாள்களுக்கு முன்பாக அவர் நேபாளத்துக்குப் புறப்பட்டு சென்றார்.  காத்மண்டு சென்றவர் பின்னர் அங்கிருந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு  சென்றார். அஜித்தைப் பார்த்ததும் ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரை வரவேற்று தங்கள் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அஜித்துடன் நீண்ட நேரம் ராணுவ வீரர்கள் உரையாடினர். பிறகு அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். "வலிமை'  படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதையடுத்து கடந்த 20 நாள்களாக அஜித்  பயணம் மேற்கொண்டுள்ளார்.  அதற்கு பிறகு ஒவ்வொரு நாடாகச் சென்று, அங்கு பைக் பயணம் மேற்கொள்ள உள்ளார். 

முதல் கட்டமாக அவர் ஆஸ்திரேலியா செல்கிறார். அடுத்த மாதம் அந்த பயணம் இருக்கலாம். உலகம் முழுக்க மோட்டார் பைக்கில் தனியாக சுற்றுப்பயணம் செய்த சாகசப் பெண்ணான மரல் யாசர்லூவை அஜித் தில்லியில் சந்தித்து ஆலோசித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளுக்கும் மோட்டார் சைக்கிள் பயணம் செல்ல விருப்பம் ஏற்பட்டுள்ளது.
 

----------------------------------------------------------

பிரபலமாக இருக்கும் பல நடிகைகள் வலைதளங்களில்  தங்களைப் பற்றியும் தங்கள் படங்கள் பற்றியும் அவ்வப்போது ரசிகர்களிடம் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இன்னும் சில நடிகைகள் வாரத்திற்கு ஒரு முறையாவது ரசிகர்களுடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.  அதில் ரசிகர்கள் என்கிற பெயரில் சிலர் எல்லை மீறுவதும் உண்டு.

"முகமூடி', மற்றும் "புட்டபொம்மா' பாடல் புகழ் பூஜா ஹெக்டேவுக்கும் சமீபத்தில் ரசிகர்களுடனான  கருத்து இப்படி ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. ரசிகர் ஒருவர் பூஜாவிடம், "உங்களது கவர்ச்சி  படம் ஒன்றைப் பதிவிடுங்கள்' என கேட்டுள்ளார். 

அதற்கு சற்றும் கோபப்படாத பூஜா ஹெக்டே, தனது கால்கள் மட்டும் தெரியும்படியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, "வெறும் கால்கள்' என குறிப்பிட்டு பக்குவமான பதிலடியும் கொடுத்துள்ளார்.
 

----------------------------------------------------------

சென்னையில் ஆண்டுதோறும் டிசம்பர்  மாதத்தில் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். உலக அளவில் பிரசித்தி பெற்ற படங்கள் இதில் கலந்து கொள்ளும். உலக திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள். சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள சென்னை ரசிகர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.  சென்ற ஆண்டு கரோனா பாதிப்பினால் விழா தள்ளிப் போனது.

தற்போது இந்த ஆண்டில் திட்டமிட்டபடியே டிசம்பர் மாதத்தில் விழா தொடங்குகிறது. 12 நாள்கள் நடக்கும் இந்த விழாவில் 53 நாடுகளைச் சேர்ந்த 92 படங்கள் சத்யம், காசினோ  திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. போட்டிப் பிரிவில் தமிழ்ப் படங்கள் பல கலந்து கொள்கின்றன. இதிலிருந்து சிறந்த படம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு  வழங்கப்படும்.

----------------------------------------------------------

நடிகர் சிலம்பரசன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்  தராமல் அவர் ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது... ""டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் இருவரும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் என்னைப் பற்றி புகார் கூறினார்கள்.

"அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் சிம்பு சம்பளத்தை விட்டுக் கொடுத்ததாகச் சொன்னார்கள். சிம்புவுக்கு நான் சம்பளம் பாக்கி வைக்கவில்லை. முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டேன். சிம்புவால் இந்தப் படத்தின் படப்பிடிப்பில்  பலமுறை பிரச்னைகள் ஏற்பட்டன. அது பலருக்கும் தெரியும். பாங்காக்கில் படப்பிடிப்பு  வைத்துவிட்டு ஒட்டுமொத்த படக்குழுவும் காத்திருந்தபோது, சிம்பு மட்டும் படப்பிடிப்புக்கு வரவில்லை.

"ஒரு கட்டத்தில் இந்தப் படத்தையே கைவிட்டு விடுவோம்' என்றார். நான் மறுத்தேன். "இந்த படம் ஒருவேளை வெளியாகி, நஷ்டம் ஏற்பட்டால் அது என் பொறுப்பு. உங்களுக்கு அடுத்த படத்தை சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறேன்' என சிம்பு சொன்னார். படம் வெளியாகி பெரும் தோல்வியைச் சந்தித்தது. இது தொடர்பாக அப்போதே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். இப்போது புதிய நிர்வாகிகளிடமும் புகார் அளித்துள்ளேன். 

சொன்னபடி சிம்பு எனக்காகப் படம் நடித்துத் தரவில்லை. அவர் ஏமாற்றிவிட்டதை அறிந்த பிறகே அவர் மீது போலீஸ் கமிஷனர் ஆபீசிலும் நேற்று புகார் அளித்தேன். ரூ.12 கோடி தர வேண்டும். எனவே வாக்குறுதி தந்தபடி என் படத்தில் சிம்பு சம்பளம் வாங்காமல் நடிக்க வேண்டும்'' என்றார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com