பொது இடங்களில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கும் ரோபோ, சிங்கப்பூரில் இயக்கப்படுகிறது.
சிங்கப்பூரின் தோ பாயோ சென்ட்ரல் பகுதியில் இயக்கப்படும் இந்த ரோபோவின் பெயர் சேவியர். மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரோபோவில் எட்டுத் திசைகளிலும் படமெடுக்கக் கூடிய, விடியோ எடுக்கக் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தின் இருட்டான பகுதிகளிலும் இந்த கேமராக்கள் படம் எடுக்கும்.
பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள், தெருவோரங்களில் சட்டவிரோதமாக உணவுக்கடைகளை நடத்துபவர்கள், விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள், கூட்டமாகச் செல்பவர்கள் என எல்லாரையும் இந்த ரோபோ படம், விடியோ எடுத்து அவற்றை ரோபாவை இயக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு உடனே அனுப்பிவிடுகிறது. அதைப் பார்த்து தேவையான நடவடிக்கைகளை சிங்கப்பூரின் காவல்துறை உடனே எடுக்கிறது.
மேலும் இதை மேம்படுத்தும் நோக்கத்துடன் இப்போது சோதனைமுறையில் இந்த ரோபோ இயக்கப்படுகிறது. குற்றச் செயல்களை தடுக்கும் திறனுடன் இந்த ரோபாவை இயங்க வைக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.