ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அடிக்கடி விக்கல் வந்தால்?

எனக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. பிறந்து இரண்டு மாதத்திலிருந்து குழந்தைக்கு அடிக்கடி விக்கல் வரத் தொடங்கியது. இப்பொழுது வரை வாரத்திற்கு இரண்டு நாள்கள் விக்கல் வருகிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அடிக்கடி விக்கல் வந்தால்?

எனக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. பிறந்து இரண்டு மாதத்திலிருந்து குழந்தைக்கு அடிக்கடி விக்கல் வரத் தொடங்கியது. இப்பொழுது வரை வாரத்திற்கு இரண்டு நாள்கள் விக்கல் வருகிறது. ஒருநாள் முழுவதும் 8-10 முறை விக்கல் வந்து, பாலாடையில் 4-5 முறை தண்ணீர் கொடுத்தால்தான் நிற்கிறது. அவள் உடம்பு எப்போதும் சூடாகவே உள்ளது. எடையும் குறைவு. இரண்டு பற்களுக்கு இடையில் இடைவெளி உள்ளது. குழந்தை வளர்ந்தபிறகு இந்த விக்கல் பிரச்னை பெரிய பிரச்னையாக ஆகுமா ? எப்படி குணப்படுத்துவது?

பி.கே. மோகனப்பிரியா,
கும்பகோணம்.

தலையைச் சார்ந்த பிராணவாயுவும், மார்பைச் சார்ந்த உதானவாயுவும் தம்முடைய அன்றாட செயல்பாடுகளிலிருந்து தொய்வையோ - சீற்றத்தையோ அடைந்தால் நீங்கள் குறிப்பிடும் வகையில் குழந்தைக்கு விக்கல் ஏற்படலாம். இவ்விரு வாயுக்களின் எதிர்மறையான செயலாகிய மேல்நோக்கிச் செல்லுதல் எனும் நிலையை கீழ் நோக்கிச் செயலாக்கினால், குழந்தைக்கு குணம் கிடைக்கலாம்.

"அஷ்டாங்கஹ்ருதயம்' எனும் ஆயுர்வேத நூலில் குழந்தைகளுக்கென்றே ஒரு மருந்தைத் தயாரிக்கும் விதத்தை வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். இம்மருந்தை வயதிற்கு ஏற்ப சிறிய அளவில் தேன் மற்றும் நெய்யுடன் குழைத்து நாக்கில் தடவி சாப்பிடக் கொடுத்தால் - கிராணி எனும் உண்ட உணவு செரிக்காமல் அப்படியே மலத்தில், வெளியேறும் உபாதை மாறுமென்றும், மேல் நோக்கிச் செல்லும் வாயுவினை கீழ் நோக்கிச் செலுத்தும் திறனையும் ஏற்படுத்தும் என்கிறார்.

அம்மருந்து பற்றிய விவரம்:

மஞ்சள், தேவதாரு, ஸரளதேவதாரு, யானைத்திப்பிலி, கண்டங்கத்தரி வேர், முள்ளுக் கத்தரிவேர், ஓரிலை வேர், சதகுப்பை - இந்த எட்டு வகை மருந்துகளையும் சம எடையில் இடித்துத் தூளாக்கி, துணியால் சலித்து, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும்.

இரண்டு வயதாகிய உங்களுடைய குழந்தைக்கு இந்த சூரண மருந்தை சுமார் 2-3 கிராம் எடுத்து, அதில் சிறிது உருக்கிய பசு நெய்யைவிட்டுக் குழைத்து (3 மி.லி), தேன் 2 மி.லி. விட்டுக் கலந்து, ஒருநாளில் 3-4 வேளை, உணவிற்கு அரை மணியிலிருந்து முக்கால் மணி நேரம் முன்பாகச் சாப்பிடக் கொடுக்கவும்.

இம்மருந்து நல்ல தரமாகத் தயாரிக்கப்பட்டு, தற்சமயம் விற்பனையிலுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

இம்மருந்து மேற்குறிப்பிட்ட இரு செயலைச் செய்வதுடன், மேலும் சில சிறந்த செயல்களை குழந்தைகளுக்குச் செய்யும்.

பசியை நன்றாகத் தூண்டிவிடும். பேதியை கட்டுப்படுத்தும். காய்ச்சலை குணப்படுத்தும். மூச்சிரைப்பை மட்டுப்படுத்தும். காமாலை, சோகை, இருமலை குறைத்துவிடும். குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து வகை உபாதைகளுக்கும் கொடுக்கலாம்.

உடல் வலுவையும், நிறத்தையும் கூட்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்க, கோரைக்கிழங்கு, சந்தனசிராத்தூள், சுக்கு , இருவேலி, பர்பாடகப் புல், வெட்டிவேர் ஆகியவற்றை சம எடையாக எடுத்து, அதில் 12-15 கிராம் மொத்தமாகச் சேர்த்து, ஒருலிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, அரைலிட்டராகக் குறுகியதும் வடிகட்டி, குளிர்ந்த பிறகு சிறிது சிறிதாக இடைவெளிவிட்டு, ஒரு நாளில் பலதடவை பருகுவதால் காய்ச்சலும், உடல் சூடும் தணியும். பசியை நன்றாகத் தூண்டிவிடும்.

தண்ணீர் தாவரத்தை நன்கு குணப்படுத்தும். இந்த மருந்தும் தற்சமயம் விற்பனையில் உள்ளது. இதை வீட்டிலேயே தயாரித்தும் பருகலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com