என் இடது கண் நரம்பு அடிக்கடி துடிக்கிறது. இமைகளை இறுக்கி மூடினால்
நின்றுவிடுகிறது. சற்று நேரம் கழித்து மறுபடியும் துடிக்கிறது. நரம்பை வலுப்
படுத்தும் மருந்துகள் சாப்பிட்டும் பலனில்லை இது எதனால்?
- முத்துவேல், கும்பகோணம்.
துடிப்பு நரம்பினுடைய பலவீனத்தைக் காட்டுகிறது. மூளையில் ஏற்படும் பயம் கலந்த சோர்வு, நீண்ட வருடங்களாக சர்க்கரை உபாதையின் தாக்கம், வாயு- பித்த தோஷங்களின் ஆதிக்ய தன்மை நிறைந்த உடல் வாகு, குடலில் ஏற்படும் மலக்கட்டு, வாயுவின் சீற்றம், நேரம் தவறி உணவை உண்ணுதல் போன்ற உபாதையுள்ளவர்களுக்கு நரம்பு பலவீனமானது எளிதில் உடலில் தென்படும்.
இதில் எதை வேண்டுமானாலும் நீங்கள் கட்டுப்படுத்தி சரிசெய்துவிட முடியும், வாயு- பித்த ஆதிக்ய உடல்வாகுவைத் தவிர- நரம்புகளை வலுப்படுத்த, நெய்ப்பு, கனம், நிலைப்பு போன்ற தன்மையுடைய உணவு- செயல்- மருந்து ஆகியவற்றின் சேர்க்கையினால் மட்டுமே இயலும்.
உடல் உட்புற போஷகாம்சத்தை உறுதிப்படுத்தும் இந்த குணங்கள், நெய், பால், மாமிஸ வகை உணவுகள், பருப்புகள், தானியங்கள் போன்றவற்றில் நிறைந்திருந்தாலும் அவற்றை உங்கள் செரிமான கேந்திரங்கள் திறம்பட செயல்பட்டு, அந்த குணங்களின் வரவை நரம்புகளில் நிரப்பினால்தான் நல்ல பலனை எதிர்பார்க்க முடியும்.
நரம்புகளை பலவீனப்படுத்தும் வாயுவின் குணங்களை மாற்றி அமைத்து வலுவைக் கூட்டும் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்துகளாகிய, தாடிமாதி கிருதம், இந்துகாந்தம் கிருதம், விதார்யாதி கிருதம், கல்யாணக கிருதம் போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி, சிறிய அளவில் காலை, மதியம், இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட்டு வருதல் நலமாகும்.
நெய் மருந்தைச் சாப்பிட்ட பிறகு, சிறிது வென்னீர் அருந்தினால், நெய் மருந்தானது உருகி, அதிலுள்ள மூலிகைப் பொருட்கள் விடுபட்டு, விரைவில் செரித்து, நரம்புகளைச் சென்றடைந்து துடிப்பை மாற்றி, சுறுசுறுப்பை ஏற்படுத்தித் தரும்.
மேற்குறிப்பிட்ட குணங்களை தன்னகத்தே பொதித்து வைத்துள்ள அஸ்வகந்தா சூரணத்தை, ஐந்து கிராம் எடுத்து, 10 மி.லி. தேன் குழைத்து, இரவில் படுக்கும் முன் சாப்பிட உகந்த மருந்தாகும்.
நரம்புத் துடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியின் மேல் பாகத்திலோ, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ சிகிச்சை மேற்கொள்வதும் அவசியமாகும்.
கார்ப்பாஸாஸ்தியாதி தைலம், பிரபஞ்சன விமர்தனம், க்ஷரபலா தைலம் போன்ற மூலிகைத் தைலங்களை தலை, உடல் (பிரபஞ்சன விமர்தனம் தைலம்) பகுதிகளில் வெதுவெதுப்பாகத் தடவி, அரை, முக்கால் மணி நேரமாவது ஊறிய பிறகு, வென்னீரில் குளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், நரம்பு உபாதைகளை நீங்கள் பெருமளவு குறைக்கலாம்.
நரம்புகளை வலுவிழக்கச் செய்யும் குளிர்ந்த நீரை தலைக்கு விட்டுக் கொள்ளுதல், குளிர்ந்த நீர் பருகுதல், சூடாறிய நிலையிலுள்ள உருளைக்கிழங்கு பொரியல், வாழைக்காய் பொரியல், பருப்பு சாம்பார், சுண்டல் ( கொண்டைக்கடலை, பச்சைப் பயிறு முதலியன) குளிரூட்டப்பட்ட அறையிலுள்ள படுக்கைத் தலையணைப் பயன்பாடு போன்றவற்றை நீங்கள் தவிர்ப்பது நல்லது.
(தொடரும்)