அந்தச் சிறுவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே ஆசிரியரிடம் சண்டை போட்டு பள்ளியை விட்டு நின்று விட்டான்.
கவலையடைந்த அவனது தாயார் கடிதம் ஒன்று எழுதி அந்தச் சிறுவனிடம் கொடுத்து கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தன் உறவினரிடம் அனுப்பினார்.
கடிதத்தை படித்த உறவினர், "கடிதத்தை படித்தாயா?' என்று சிறுவனைக் கேட்டார்.
"பிறருக்கு கொடுத்த கடிதங்களை நான் படிப்பதில்லை' என்றான் அந்தச் சிறுவன்.
"படித்துப்பாரு' என்று அவனிடமே கொடுத்தார் அவர்.
"சமுதாயத்தையே திருத்துகிற நீங்கள் என் மகனையும் திருத்தி நல்லபடி கொண்டு வாருங்கள்' என்று எழுதியிருந்தது.
அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சமுதாய மாற்றத்திற்காக எழுதி எழுதிக் குவித்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.