சமீபமாக தேர்ந்த கதைகளில் நடித்து வருகிறார் விக்ராந்த். அடுத்து இவர் நடிக்கும் படத்துக்கு "பக்ரீத்' என்று பெயரிடப்பட்டுள்ளது. விக்ராந்த் ஜோடியாக வசுந்தரா நடிக்கிறார். "யா யா' படத்தைத் தயாரித்த முருகராஜ் இப்படத்தை தயாரிக்கிறார். "சிகை' மற்றும் "பட்சி' படங்களை இயக்கி வரும் ஜெகதீசன் சுபு கதை எழுதி இயக்குவதோடு, இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவும் செய்கிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது, "விவசாயம் செய்வதை பெருமையாக நினைத்து, தற்கால சூழலிலும் விவசாயத்தில் ஈடுபடுகிறவர் விக்ராந்த். திடீரென அவரது வாழ்வில் ஒட்டகம் ஒன்று வந்து சேர்கிறது. அந்த ஒட்டகம் அவரது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதுதான் கதை.
மனிதனுக்கும், விலங்குக்குமான நேச, பாசத்தை சொல்லுவதாக திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. பிராணிகளுடன் வாழும் மன நிலை என்பது நம் ஆதி ரத்தத்திலேயே உண்டு. நம்பிக்கை இன்மை நிறைந்த மனித உறவுகளை மனதளவில் துரத்தியவர்கள், பிராணிகளின் பேசா அன்பை நிழலாக்கிக் கொள்கிறார்கள். இப்படியான ஒரு சூழல்தான் இந்தக் கதையின் கரு. நாம் எல்லாருமே ஏதோ ஒரு பிராணியிடம் ஒரு காதலை, பிரிவை மீட்டெடுத்துதான் வளர்ந்திருக்கிறோம்'' என்றார் இயக்குநர் ஜெகதீஷ்பாபு. சென்னை, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். அடுத்தடுத்த கட்டங்களாக தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.