தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து பிரபலமானவர் சோனாலி பிந்த்ரே. கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென்று ஒரு தகவல் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் சோனாலி. கேன்சரால் பாதித்திருப்பதாக அவர் தெரிவித்ததையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவர் குணம் அடைய பிரார்த்திப்பதாக ஆறுதல் கூறி மறு தகவல் பகிர்ந்தனர். அமெரிக்காவில் தங்கி கேன்சர் பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வரும் சோனாலி சமீபத்தில் தனது தலை முடியை முற்றிலுமாக ஷேவ் செய்து மொட்டை தோற்றத்துக்கு மாறினார். அவரது தோற்றத்தை கண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, "உனது அழகான கூந்தலை நீ இழந்திருப்பது மன வருத்தம் அளிக்கிறது' என்று ஆறுதல் வார்த்தைகள் கூறியதுடன் அமெரிக்காவில் உள்ள பிரபல விக் நிறுவனம் ஒன்றில் சோனாலிக்காக ஸ்பெஷலான விக் ஆர்டர் செய்து அனுப்பி வைத்தார். அதை பெற்றுக்கொண்ட சோனாலி, பிரியங்கா சோப்ராவுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் எந்நேரமும் தலையில் விக் அணிந்திருக்காமல் மொட்டை தோற்றத்துடன் தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். சில தினங்களுக்கு முன் புத்தக தினத்தன்று கையில் ஒரு புத்தகத்துடன் தனது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். "இன்று புத்தக தினம் இதை கொண்டாடுவதற்கு சிறப்பான வழி சிறந்த புத்தகத்தை படிப்பதுதான். ரஷ்ய வரலாற்றை சொல்லும், "ஏ ஜென்டில்மேன் இன் மாஸ்கோ' புத்தகத்தை படிக்க தொடங்கியிருக்கிறேன். அதன் தொடக்கமே மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. அந்த புத்தகத்தை படித்து முடிப்பதற்கு காத்திருக்கப்போவதில்லை' என குறிப்பிட்டுள்ளார்.