நற்பணி இயக்கம் தொடங்கியுள்ள அடுத்த நடிகர் ஜெய்வந்த். "மத்திய சென்னை", "காட்டுப்பய சார் இந்த காளி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அடிப்படையில் மனித நேய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டாளர். , சென்னை பெரு வெள்ளத்தின் போது சைதாப்பேட்டை பகுதிகளில் இவர் பெரும் பங்காற்றினார்.
சமூக நலன் சார்ந்த அம்சங்களை தனது ரசிகர்களுடன் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நற்பணி இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது... "என்னை தனித்தனியாக சந்திக்கும் நண்பர்கள் எல்லாம் அவ்வப்போது இதை பற்றி பேசுவார்கள். அப்படி செய்து பார்த்தால் என்ன என்பதன் விரிவாக்கம்தான் இது. இந்த இயக்கத்தின் நோக்கம் பல்வேறு மனிதநேய நடவடிக்கைகள், ஒத்த கருத்துடைய நண்பர்கள் - சமூக ஆர்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து தன்னலமற்ற மக்கள் தொண்டாற்ற வேண்டும். இது ஒரு நெடுந்தூர பயணம்.
முதல் வேலையாக நாங்கள் இயற்கை நோக்கி திரும்ப இருக்கிறோம். ஒவ்வொருத்தரும் ஒரு மரமாவது வளருங்கள்... செடி, கொடிகளை நேசியுங்கள்... பறவைகளோடு பேசுங்கள்... இயற்கையை அனுபவிக்க ஆரம்பித்து விட்டால் தனிமை, பிரிவு, எதுவும் அண்டாது. இந்த அற்புதத்தில் உண்மையை உணர்ந்து பணியாற்ற இருக்கிறோம்'' என்றார்.
இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த இயக்க பொறுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.