"காவியத்தலைவன்', "முற்றுகை', "வள்ளி', "வரப்போறா ராஜாளி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் அரவிந்த் சித்தார்த்தா. சின்னத்திரையில் 100-க்கும் மேற்பட்ட தொடர்களுக்கு இசை அமைத்துள்ளார். பக்தி பாடல்கள் குறும்படங்கள், ஆவணப்படங்கள் என சினிமா சார்ந்த பல் துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வருபவர்.
நீண்ட இடைவெளிக்குப் பின் எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் வெளிவந்துள்ள "அழியாத கோலங்கள் 2' படத்துக்கு இசையமைத்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது...
"என் நீண்ட இசைப் பயணம் இது. சினிமா, சீரியல் என பல பரிமாணங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். சினிமாவை விட்டுக் கொஞ்சம் விலகி இருந்தேன். இப்போது மீண்டும் இசையமைத்துள்ளேன். படத்தில் ஒரு பாடல் தான் என்றாலும் அந்தப் பாடல் ரசிகர்களைக் கவரும் விதத்தில் வந்துள்ளது. கவிஞர் வைரமுத்து இந்தப் பாடலின் வரிகளில் தனிக்கவனம் செலுத்தி உருவாக்கியுள்ளார்.
கே.எஸ். சித்ரா பாடிய பல ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்றாக வந்துள்ளது. பின்னணி இசையிலும் மெனக்கெடல்கள் இருந்தன. வசனங்களின் மேல் இசையின் ஆதிக்கத்தைக் கொண்டு வராமல் தேவையான இடத்தில் படத்தின் காட்சிகளுக்கு உதவும் வகையில் இசையமைத்துள்ளேன். தொடர்ந்து சினிமாக்களில் இயங்கலாம் என முடிவெடுத்துள்ளேன். நல்ல களம், கதைகளை எதிர்பார்க்கிறேன்'' என்றார்.