மர்ம காதல் கொலைகள் பின்னணியில் உருவாகி வரும் படம் "எனக்கு காதல் பிடிக்கும்'. பூங்கா, கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் சுற்றித் திரியும் காதலர்கள் வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். அந்த கொலைகளுக்கு காரணம் என்ன... கொலை செய்பவரின் பின்னணி என்ன... அவர் இந்த சமூகத்துக்கு வைக்கும் கோரிக்கை என்ன என்பது கதை. இந்தப் படத்தில் கதாநாயகன், கதாநாயகி என்ற வழக்கமான சம்பிரதாயங்கள் இல்லை.
புதுமுகங்கள் அனைவரும் கதாபாத்திரங்களாகவே நடிக்கிறார்கள். கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் சக்திவேல். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""ஒரு தேசம் அதன் இளைஞர்களை சரி வர அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. அதுவும் இளைஞர்களை பெரும்பான்மையாக கொண்ட சமூகத்தில் இது பெரும் பிரச்னை. சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் இளைஞர்கள் எத்தனை பேர். சரியான அங்கீகாரம் இல்லாமல் போனதுதான் இங்கே துரதிருஷ்டம். நிராகரிப்புகளும், புறக்கணிப்புகள் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் ஒரு இளைஞனுக்கு கோபம் வருகிறது. அந்த கோபம் மூலம் அவன் இந்த சமூகத்துக்கு வைக்கும் கோரிக்கை என்ன என்பதே திரைக்கதை. முழுக்க முழுக்க வேலூரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது'' என்றார்.