"பேராண்மை', "அரவான்', "பரதேசி', "கபாலி' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் பரவலான வரவேற்பை பெற்றவர் தன்ஷிகா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது முழுக்க முழுக்க தனக்கு முக்கியத்துவம் தரும் வகையில் "யோகி டா' என்ற படத்தில் நடித்து வருகிறார். "கபாலி' படத்தில் ஆண்களைப் போல் தலைமுடி வெட்டியிருந்த தன்ஷிகா, இப்படத்திலும் அதே தோற்றத்தில் நடிக்கிறார். அத்துடன் சண்டைக் காட்சிகளுக்காக பிரத்யேக பயிற்சி பெற்று டூப் இல்லாமல் நடித்து வருகிறார். "வேதாளம்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த கபீர் சிங் இந்தப் படத்தில் தன்ஷிகாவுக்கு வில்லனாக நடிக்கிறார். "றெக்க' படத்திலும் நடித்து கவனம் ஈர்த்த இவர், இது குறித்து அவர் பேசும் போது... ""முதன் முறையாக ஒரு கதாநாயகிக்கு வில்லனாக நடிப்பது முற்றிலும் புது அனுபவம். இதில் வரும் சேகர் பாபு கதாபாத்திரம் மாறுபட்ட அனுபவமாகவும் இருக்கும். எனக்கான கதாபாத்திரம் மிகவும் வலுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வில்லன் கதாபாத்திரத்துக்காக என் தோற்றத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த அனுபவத்தை திரையில் பார்ப்பதற்கு நானே காத்திருக்கிறேன்'' என்றார் கபீர் சிங். கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிப்ரவரி மாத வெளியீடாக படம் திரைக்கு வரவுள்ளது.