குறும்பட உலகத்தில் இருந்து வெள்ளித்திரைக்கு வரவிருக்கும் மற்றொரு படைப்பாளி பாலாஜி வைரமுத்து. இவர் எழுதி இயக்கும் படத்துக்கு "பஞ்சராக்ஷரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதென்ன "பஞ்சராக்ஷரம்' என கேட்ட போது... ""நமசிவாய...' என்ற இந்த ஐந்து எழுத்து மந்திரம். நம் எண்ணங்கள்தான் வாழ்க்கை. ஒரு விஷயத்தில் எந்தளவுக்கு திட்டமிட்டு இருக்கிறோமோ, அது அந்தளவுக்கு கிடைத்தே தீரும் என்பதுதான் இதன் பொருள். ஒரு விஷயத்தை ஆழ்ந்து நோக்க வேண்டும் என்பதுதான் சிவனின் தத்துவம். அது மனித எண்ணங்களின் ரகசியம். அந்த ரகசியத்தை கொண்டு வந்திருக்கிறேன். எண்ணம் எதுவோ, அதுவே வாழ்க்கை. மூடி அடைக்கப்பட்டிருக்கும் சின்ன கூடாரத்தில் இருந்து ஓர் உலகமே வெளியே வருகிறது என்பதும் பஞ்சராக்ஷரம். இது நம்பிக்கைகளோடு விளையாடும் கதை. கெட்ட விஷயங்களை விட்டொழிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே, அதை பற்றி சிந்திப்போம். அந்த எண்ணம் சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை அமைக்கிறது. இது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தையும், இந்த நாளையும் இணைத்து பார்க்கும் முயற்சி'' என்றார் பாலாஜி வைரமுத்து. சனா, கோகுல், மதுஷாலினி, அஸ்வின் ஜெரோம், சந்தோஷ் ஆகியோர் நடிக்கின்றனர். பிப்ரவரியில் படம் திரைக்கு வருகிறது.