செல்வம் அன் கோ கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வேதமாணவன்'. ஓய்வுபெற்ற நீதிபதி மு.புகழேந்தி படத் தயாரிப்பாளராக களமிறங்கியதோடு, பாடல்களும் எழுதி இயக்குநராகவும் அறிமுகமாகிறார். மனோ ஜெயந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மத்திய பிரதேசத்து மாடல் அழகி ஊர்வசி ஜோஷி கதாநாயகியாக அறிமுகமாகிறார். டெல்லி கணேஷ், பெஞ்சமின்,போண்டாமணி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். ""ஒரு தூக்குத்தண்டனை கைதி விடுதலையாகி வெளியே வருகிறான், அவனை சமுதாயம் ஏற்கிறதா? இல்லையா? என்பதை காட்டுவதே திரைக்கதை அம்சம். எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படியோர் பாதையில்தான் இந்த கதை பயணமாகும்'' என்றார் நீதிபதி புகழேந்தி.