கார்கில் வெற்றிக் கொண்டாட்டம்!

இந்தியா கார்கில் போரில் வெற்றியடைந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதற்கான கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன.
கார்கில் வெற்றிக் கொண்டாட்டம்!

இந்தியா கார்கில் போரில் வெற்றியடைந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதற்கான கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன. கார்கில் வெற்றி குறித்து, ஏழு நிமிடங்கள் ஓடும் ஆவணப் படத்தை, பாதுகாப்புத் துறை தயாரித்துள்ளது. போர் முனையில் எடுக்கப்பட்ட, புகைப்படங்களும், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. ராணுவ ஆயுதக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவை சார்பில், நாடு முழுவதும், பல்வேறு இடங்களில், கார்கில் வெற்றி விழா கொண்டாடப்படுகிறது.
 இந்திய- பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள பனி படரும் மிக உயர்ந்த இமயமலை பிரதேசம். இரு நாட்டு ராணுவமும் அந்தப் பகுதியில் முகாமிட்டு இரவு பகலாக எல்லையைக் கண்காணித்து வருகின்றன.
 இந்தக் கோட்டின் இரு பகுதியிலும் பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. தரைப் பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் இந்தப் பகுதி அமைந்துள்ளது.
 பார்க்க பார்க்க பரவசப்படுத்தும் இந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து 205 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஸ்ரீநகரையும், லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை, கார்கில் வழியாக செல்கிறது. கரடு முரடான மலைப் பிரதேசத்தில் இது ஒன்றுதான் போக்குவரத்துக்கான ஒரே வழி. குளிர்காலத்தில் இரு நாட்டு ராணுவத்தினரும் தங்கள் பாசறைகளை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்கள்.
 குளிர்காலம் முடிந்ததும் மீண்டும் ராணுவம் தங்கள் நிலைகளுக்குத் திரும்பும். அதைத் தொடர்ந்து ராணுவத்தின் ரோந்தும் தீவிரமாகும். இதுதான் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வழக்கம்.

காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடும் பாகிஸ்தான் கார்கில் பகுதிக்குள் ஊடுருவி ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலையை துண்டித்து விட்டால் அங்கிருந்து இந்தியாவை எளிதில் தாக்கலாம். இதன் மூலம் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்று பாகிஸ்தான் கனவு கண்டது. இந்த ஊடுருவல் முயற்சிக்கு பல முறை திட்டம் வகுத்தார்கள். ஆனால் ஜியா உல் ஹக், பெனாசிர் பூட்டோ ஆகியோர் அதிபர்களாக இருந்தபோது அந்த திட்டத்தை நிராகரித்து விட்டனர்.
 ஆனால், 1990-களில் பாகிஸ்தான் தூண்டுதலோடு காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்கள் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவுக்கு வேட்டு வைத்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் உருவானது.
 பதட்டத்தை தவிர்க்கவும் காஷ்மீர் பிரச்சினையை அமைதியாகத் தீர்த்துக் கொள்ளும் வகையிலும் 1999 பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானுக்குப் பேருந்து பயணத்தைத் தொடங்கி வைத்து லாகூருக்கு பேருந்திலேயே சென்று வந்தார். இந்தியா அன்புடன் நேசக்கரம் நீட்டியது. ஆனால் பாகிஸ்தான் பல மறைமுக வேலைகளைச் செய்தது.
 ஒருபுறம் நட்பு பாராட்டி கொண்டே திரைமறைவில் ஊடுருவல் வேலைகளைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருந்தது.
 1999-ம் ஆண்டு குளிர்காலத்தில் படைகள் கீழே இறங்குவதற்குப் பதில் அங்கேயே முகாமிட்டு இருந்தன. ராணுவ தளவாடங்களைக் கொண்டு வந்து குவித்தனர். படைகள் கீழே இறங்கி விட்டதால் காலியாக இருந்த இந்திய ராணுவ நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியது. கார்கிலில் ஊடுருவி எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர்.
 130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவினர். கார்கிலுக்கு அருகில் பனி மலைக்குத் தெற்கே அமைந்துள்ள பகுதிகளை முற்றிலுமாகத் தங்கள் வசப்படுத்தி விட்டனர். இந்திய ராணுவ நிலைகளைக் கைப்பற்றியதோடு அங்கு புதிதாக ராணுவ தளங்களையும் அமைத்தனர்.
 மாடு மேய்ப்பவர்கள்தான் முதலில் இந்த ஊடுருவலை இந்திய ராணுவத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தனர். மலை முகடுகளில் மாடு மேய்க்க சென்றவர்கள், பாகிஸ்தான் ராணுவத்தினரின் நடமாட்டத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
 மாடு மேய்ப்பவர்கள் சொன்ன தகவலை கேட்டதும் உஷார் அடைந்த ராணுவத்தினர் படாலிக் பகுதிக்கு ரோந்து சென்றனர். அவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்துச் சித்ரவதை செய்து கொன்றனர். அப்போதும் இது தீவிரவாதிகள் செயலாகத்தான் இருக்கும் என்று ராணுவம் உறுதிப்படுத்தியது. ஆனால் அடுத்த சில நாட்களில் அங்கிருந்து கார்கில் ராணுவ கிடங்கை குறி வைத்து குண்டு வீசப்பட்டதில் ராணுவ கிடங்கு சேதமடைந்தது. அதன் பிறகுதான் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி இருக்கிறது என்பதை உறுதி செய்தனர்.

பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்ட பிரதமர் வாஜ்பாய் போர் பிரகடனப்படுத்தினார். தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்க்களத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. ஆனால் கார்கில் போர் நடந்தது சமவெளி பகுதி அல்ல. கரடு முரடான மலை பகுதி! போக்குவரத்துக்கு ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலை மட்டும்தான் உண்டு. ஒரே வழியில் லட்சக்கணக்கில் வீரர்கள் செல்வது... ஆயுதங்கள் கொண்டு செல்வது.... பீரங்கிகள் அணிவகுப்பது... அவ்வளவு எளிதானதல்ல.
 முதலில் ஸ்ரீநகர் - லடாக் தேசிய நெடுஞ்சாலையை மீட்க போராடியது. மலை முகடுகளின் உச்சியில் இருந்து பாகிஸ்தான் பொழிந்த குண்டு மழையையும், துப்பாக்கி குண்டுகளையும் கீழே இருந்து சந்தித்து அங்குலம் அங்குலமாக முன்னேறுவது ராணுவத்தின் திட்டமாக இருந்தது.
 சாலை முழுவதும் குண்டு வீச்சில் சேதம் அடைந்து கிடந்தது. வழி நெடுக கண்ணி வெடிகளும் மிரட்டியது. அவற்றை ராணுவத்தினர் அப்புறப்படுத்தினார்கள். 9 ஆயிரம் கண்ணி வெடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டது.
 சிறு சிறு குழுக்களாக வெறும் 30 ஆயிரம் வீரர்கள் மட்டுமே போர்க்களத்தில் இருந்தார்கள். படை சிறிதாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சுரம் அதிகமாக இருந்தது.
 எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்தால் பாகிஸ்தான் படைகளைப் பல முனைகளில் புகுந்து தாக்கி துவம்சம் செய்து இருப்பார்கள். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு ராணுவத்துக்கு விதிக்கப்பட்டிருந்தது.
 இதனால் நேருக்கு நேராக தாக்கி அவர்களை ஓட வைப்பது மட்டும்தான் சாத்தியமாக இருந்தது.
 பகல் நேரத்தில் ராணுவம் நகர்ந்ததால் மலை உச்சியில் இருந்து கவனித்து குண்டுகளை வீசினார்கள்.
 இதனால் இரவு நேரத்தையே தாக்குதலுக்கு தேர்வு செய்தார்கள். ராத்திரி நேரத்தில் வேட்டையாடினார்கள். பாகிஸ்தான் வசம் இருந்த ஒவ்வொரு சிகரத்தையும் நமது ராணுவத்தினர் மிகப்பெரிய போராட்டத்துக்கு இடையே கைப்பற்றினார்கள். மலை உச்சியில் இருந்து தாக்கிய பாகிஸ்தான் ராணுவத்தினரை மலை பாறைகளுக்கு இடையே ஊர்ந்தபடி சென்று வீழ்த்தினார்கள்.
 முன்னேறிய ராணுவத்துக்கு வலுசேர்க்க விமானப்படை விமானங்களும் குண்டுகளை வீசியது. ஆனால், உயர்ந்த மலை முகடுகளுக்கிடையே பனி மூட்டத்தில் விமானங்களை செலுத்துவது கடினமாக இருந்தது.
 இந்த போரில் இந்தியா 3 விமானங்களை இழந்தது. மிக்- 27 மிக்-21 ஆகிய இரு விமானங்களை இந்தியா இழந்தது. விமானப்படை லெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் சிறை பிடித்தது. எம்.ஐ.17 என்ற விமானத்தையும் சுட்டு வீழ்த்தினார்கள். இதில் விமானத்தில் இருந்த 4 வீரர்கள் பலியானார்கள்.
 போர் முடிவுக்கு வரவில்லை. தரைப்படைக்கு ஆதரவாக பீரங்கிப்படையும் மலை அடி வாரங்களில் இருந்து எதிரிகள் நிலைகள் மீது குண்டு மழை பொழிந்தது. முற்றிலும் மலை மீது நடந்த மாறுபட்ட போர். இளம் வீரர்களுக்கு புது அனுபவம். இதனால் வீரர்கள் பலர் இன்னுயிரை இழக்க நேரிட்டது. ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.
 நமது கடற்படையினர் போரின் போக்கை மாற்றினர். எதிரிகளை வீழ்த்த புது வியூகம் அமைத்தனர். கராச்சி துறைமுகத்துக்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து நிறுத்தியது நமது கடற்படை.
 ஒருபுறம் பெருளாதாரச் சிக்கல். இன்னொரு புறத்தில் போர். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. ராணுவத்துக்கு 6 நாட்களுக்குத்தான் எரிபொருள் இருந்த நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் விரும்பியது.
 அமெரிக்க அதிபர் பில்கிளிண்டனிடம் போரை நிறுத்த உதவும்படி பிரதமர் நவாஸ் ஷெரீப் கெஞ்சினார். இந்திய தரப்பு நியாயத்தை உணர்ந்த அமெரிக்கா உடனடியாக கார்கிலில் இருந்து பாகிஸ்தான் படைகளை வாபஸ் பெறும்படி எச்சரித்தது.
 ஆனால் இந்தியா ஏன் போர் தொடுத்தது என உலக நாடுகளிடம் இந்தியாவின் நிலையைத் தெளிவாக எடுத்துக்கூறினார் வாஜ்பாய். இதனால் அனைத்து நாடுகளும் இந்தியாவின் பக்கம் நின்றன.
 இந்திய வீரர்களின் ஆவேச தாக்குதலில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ஒவ்வொன்றாக இழந்து வந்த பாகிஸ்தான் உலக நாடுகளின் எச்சரிக்கையால் படைகளை விலக்கி கொள்ள முன் வந்தது. இதற்கான அறிவிப்பை நவாஸ்ஷெரீப் வெளியிட்டார்.
 இது அப்போது தளபதியாக இருந்த முஷரப்புக்கு பிடிக்கவில்லை. இதுவே பிற்காலத்தில் ராணுவப் புரட்சி நடத்தி முஷரப் ஆட்சியை பிடிக்க வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் படைகள் 80 சதவீதம் வெளியேறிய பிறகும் ஊடுருவிய தீவிரவாத குழுக்கள் போரை தொடர்ந்தன. அவர்களை ஒரு வாரத்தில் அடித்து விரட்டி கார்கில் பகுதி முழுவதையும் நமது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. நமது தேசிய கொடியை பறக்க விட்டு வெற்றியை நிலைநாட்டினர்.
 1999 -ஆம் ஆண்டு மே 3- ஆம் தேதி தொடங்கிய போர் ஜூலை 26-ஆம் தேதி முடிவுக்கு வந்ததாக இந்தியா அறிவித்தது.
 இந்தப் போரில் இந்தியா 527 வீரர்களைத் தியாகம் செய்துள்ளது. 1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
 எங்கள் தரப்பில் 357 வீரர்களைத் தான் இழந்தோம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷரப் தெரிவித்தார்.. ஆனால் 4 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி விட்டனர் என்ற உண்மையைப் பிற்காலத்தில் பாகிஸ்தான் அதிபராக இருந்த நவாஸ்ஷெரீப்பே ஒத்துக் கொண்டார்.
 கார்கில் வெற்றி நாயகனாகக் கொண்டாடப்படுபவர் நமது முன்னாள் பிரதமரான வாஜ்பாய். பின் முதுகில் குத்திய பாகிஸ்தானுக்குச் சரியான பாடம் புகட்டியவர்.
 - ராஜன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com