ராஜி நிலா முகில் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மாயநதி'. "பட்டதாரி', "கேரள நாட்டிளம் பெண்களுடனே' ஆகியப் படங்களில் நடித்த அபி சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். "காதல் கசக்குதய்யா', "பள்ளி பருவத்திலே' ஆகியப் படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் "ஆடுகளம்' நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன் இயக்குகிறார். இயக்குநர் பேசும் போது... "மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், இலக்குகள் ஏதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு சராசரி இளைஞன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே இந்தப் படம்.
பருவ வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக்கவர்ச்சியைக் கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா? என்பதைச் சொல்லுவதே திரைக்கதை. பவதாரிணி இசையமைத்து ஒரு பாடலையும் பாடியுள்ளார். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்கிறார். மயிலாடுதுறை, பொறையாறு, தரங்கம்பாடி, திருக்கடையூர் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.