டில்லியில் சுற்றுலா இடங்களுக்குப் பஞ்சமில்லை. இதோ இப்போது புதிதாக ஏழு உலக அதிசயங்களின் மாதிரி ஒரே இடத்தில் உருவாகியுள்ளது.
டில்லியில் சராய் காலே கான் பகுதியில் வினோத பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. பூங்காவின் சிறப்பு தாஜ் மஹால், ஈஃபில் டவர், பைசா சாயும் கோபுரம், ரோமின் கொலோசியம், ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் இயேசுநாதரின் சிலை, எகிப்தின் பிரமிட், அமெரிக்க சுதந்திர சிலையைப் போலவே மாதிரிகள் உருவாகியுள்ளன. இந்த அதிசய மாதிரிகள் தேவையில்லை என்று தூக்கி எறியப்படும் கழிவுப் பொருள்களைக் கொண்டு (உலோகம் முதல் பிளாஸ்டிக் வரை), உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பூங்காவை உருவாக்க 180 நாட்கள் தேவைப்பட்டுள்ளது. நூறு கலைஞர்கள் இரவு பகலாக உழைத்துள்ளனர். முக்கியக் கலைஞர்கள் ராகேஷ் ராணா, அனுஜ் போடார், பிஜூஸ் கண்டி பட்ரா , சந்திப் பிசல்கார் மற்றும் பிரேம் குமார் வைஷ்யா. இவர்கள் பரோடா நுண்கலை கல்லூரியைச் சேர்ந்தவர்கள். இந்த மாதிரிகள் 25 முதல் 30 அடி உயரம் கொண்டவை. பூங்காவின் மின்சாரத் தேவைக்காகச் சோலார் பேனல்கள் பூங்காவில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பூங்கா ஏழு கோடி செலவில் உருவாகியுள்ளது.
அடுத்த முறை டில்லி செல்லும் போது மறக்காமல் பார்க்க வேண்டிய அதிசய பூங்கா இது..!