கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "செவன்'. ஹவிஸ், ரகுமான், ரெஜினா, நந்திதா ஸ்வேதா, திரிதா சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நிஸார் ஷபி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். ரமேஷ் வர்மா கதை எழுதி தயாரிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளைக் கடந்து விடுகிற மனசு, எதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும். அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. நல்லவனாக வாழத்தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால், காலம் எல்லாவற்றையும் கண்ணெதிரே கலைத்து போட்டு விட்டு ஒன்றும் தெரியாத சிறுப் பிள்ளை போல் ஓடி ஒளிந்து கொள்கிறது. நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்பினேமோ, அதை வெறுக்கிறோம், ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனைக் குழிக்குள் தள்ளி, கேட்காததைக் கொடுத்து கேட்டதை மறுத்து விளையாடுகிற இந்த காலம் இங்கே சிலருக்கு என்ன பரிசளித்தது என்பதுதான் இங்கே கதைக்களம். நம்பிக்கை, துரோகத்தின் வலியை இன்னும் அக்கறையாக முன் வைக்கும் திரைக்கதை. அதே சமயம் சமூக அக்கறையும் கலந்திருக்கும்'' என்றார் நிஸார் ஷபி.