தமிழில் "பூ', "மரியான்' உள்பட சில படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் ஓரிரு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள இவர், எந்த கேள்விக்கும் தயங்காமல் பதில் சொல்லக் கூடியவர். அது போல் சமூகம் சார்ந்த தனது கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவிப்பார். இவர் இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளார். "விரைவில் நான் படம் இயக்க திட்டமிட்டு உள்ளேன். அதற்கான கதை தயாராக இருக்கிறது.
ஏற்கெனவே பல நடிகைகள் படம் இயக்கி வெற்றிபெற்று இருக்கிறார்கள். ஒரு கதாநாயகியாக இது எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும். எனக்குள் பல வருடங்களாக மறைந்துள்ள பல திறமைகளை வெளிப்படுத்த இந்த படம் உதவும். என்ன கதை என்பது பற்றி இப்போது சொல்ல மாட்டேன். நான் படம் இயக்க வருவது, ஓர் இயக்குநராக என்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. திரையில் இதுவரை சொல்லப்படாத கோணத்தில், மிகவும் நேர்மையாக ஒரு கதை சொல்ல வேண்டும் என்றுதான் இயக்குநராக மாறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார் பார்வதி.