விண்வெளி வரலாற்றில் கிறிஸ்டினா கோச், ஜெசிகா மேர் என இரு பெண்கள் விண்வெளியில் நடைப்பயணம் மேற்கொண்டு புதிய சாதனை படைத்துள்ளனர். அமெரிக்கா - ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆய்வு மையத்தை விண்வெளி வீரர்கள் வீராங்கனைகள் சுழற்சி முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். தங்கள் பணியின் போதே சில சமயங்களில் இவர்கள் விண்வெளியில் மிதந்தபடி நடைப்பயணம் மேற்கொள்வர். இதுவரை பெண் வீரங்கனைகள் செல்லும் போது அவர்களுக்குத் துணையாக ஆண் வீரர்கள் செல்வார்கள்.
ஆனால் இம்முறை கிறிஸ்டினா கோச், ஜெசிகா மேர் இருவரையும் தனியாக விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தது நாசா. அங்கு அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பேட்டரியை மாற்றும் பணியை வெற்றிகரமாக முடித்தனர். தொடர்ந்து விண்வெளியில் நடைப்பயணம் செய்து சாதனை படைத்துள்ளனர்.
1984-ஆம் ஆண்டு கேத்ரின் சல்லிவன் என்ற பெண் விண்வெளியில் முதல் முறையாக நடைப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
""எங்களுடைய இந்தப் பயணம் சில மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. ஆனால் விண்வெளி வீராங்கனைகளுக்கான ஆடை பற்றாக்குறையால் இந்தப் பயணம் தள்ளிவைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக எங்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் உறுதியானது. இதற்கு முன்னால் இது போன்ற பணிகள் பெண்களை நம்பி வழங்கப்படவில்லை. இது குறித்து நாசாவில் சர்ச்சை எழுந்தது. அதனால் தற்போது பெண்களுக்கு அந்தப்பணி வழங்கப்பட்டது. இதனால் ஆண்- பெண் அனைவரும் சமம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் எங்களுடைய பங்களிப்பை நினைத்து பெருமை கொள்கிறேன்'' என்றார் கிறிஸ்டினா கோச்.இவர்கள் இருவரது பயணம் வெற்றியடைய காரணம் என்ன தெரியுமா?
நாசா விண்வெளி வீரர்களுக்காக தற்போது புதிய விண்கல ஆடைகளை வடிவமைத்துள்ளது. சிகப்பு, வெள்ளை மற்றும் நீல நிறங்களில் தயாராகும் இந்தப் புதிய விண்வெளி ஆடைகள் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொருத்தமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இந்த ஆடைகளின் விரிவடையும் தன்மையால் வீரர்கள் எளிதாகச் செயல்பட முடியும் . நாம் பூமியில் நடப்பது போன்று விண்வெளியில் சாதாரணமாக நடக்க முடியும்.
நாற்பது வயதை கடந்தவர்கள் கிறிஸ்டினா கோச், ஜெசிகா மேர். சாதனைக்கு வயது தடையாக இருக்காது என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் இந்த இரு பெண்கள்.