ஆதரவற்றவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாக கொண்டு உருவாகி வரும் படம் "கரையேறும் கனவுகள்'. ராஜேஷ் பாலகிருஷ்ணன், நீனு, சான்ட்ரா. கஸ்தூரி, ரம்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பி.எஸ். சாமி இப்படத்தை இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... "அங்கீராமும், அடையாளமும்தான் இங்கே முதன்மையானதாக இருக்கிறது. எல்லோருமே அதற்காகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
தோல்விதான் வாழ்வின் சாபம். தோல்வியை புத்தி கூர்மை இருந்தால் சமாளித்து விடலாம். அது ஒரு அனுபவம். இலக்குகளுடன் இந்த பெரு நகரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கோ நின்று ஊரை, மனிதர்களை, காதலை, நட்பை நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு கனத்து ஞாபகங்கள் முளை விடுகிறது.
இதெல்லாம் எதன் பொருட்டு என யோசித்துப் பார்த்தால், இலக்குகள்தான் முன்னுக்கு நிற்கிறது. இப்படி அதன் போக்கில் யோசித்து எழுதிய கதைதான் இது. திறமைகளோடு சாமான்யர்களாக வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களின் கதை இது. காலத்தின் நிராகரிப்புதான் இருப்பதிலேயே பெரிய வலி. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், விரைவில் படம் வெளியாகிறது'' என்றார்.