இத்தாலியைச் சேர்ந்த பெண் இயக்குநர் இலாரியா இயக்கிய "இரண்டாம் பிறப்பு' என்ற படத்தில் அருண்மொழி முதன்மைப்பாத்திரம் ஏற்றிருந்தது பலருக்குத் தெரிந்திருக்காது. திருநங்கைகளின் வாழ்வோட்டத்தை மிக மிக இயல்பாக சித்தரித்த தமிழின் ஒரே படம்.
படத்தின் யதார்த்தத்திற்கு முழு பலத்தையும் முதன்மையாக அளித்திருந்தது அருண்மொழி ஏற்றிருந்த இயக்குநர் கதாபாத்திரம். அத்தனை துல்லிய இயல்பில் நடித்திருந்தார். எழுத்தாளரான அருண்மொழியைப் பொறுத்தவரை கட்டுரை கேட்டு மனம்பதறக் காத்திருக்கத் தேவையில்லை. இன்று கேட்டால் நாளை தந்துவிடுவார். இவ்வளவு சுலபத்தில் தந்துவிட்டாரே என்று படித்துப்பார்த்தால் கட்டுரை ஆழமான பார்வையில் எழுதப்பட்டிருக்கும். அவரது வாய்மொழியில் எத்தகைய உற்சாகமும் அர்த்தபூர்வமும் ஒலிக்குமோ அதேமுகம் அவரது கட்டுரைகளிலும் வெளிப்பட்டிருக்கும் என்கிறார் கதாசிரியர் விஸ்வாமித்ரன்.