எல்லாவற்றுக்கும் நாமேதான் காரணம்!

"மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாம் இருந்து கொண்டே இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் நாமேதான் காரணம்!

"மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாம் இருந்து கொண்டே இருக்கிறது.
 நாமே நல்லவன், கெட்டவன் என்று பிரித்துச் சொல்லி விடுகிறோம். கெட்டவனாக இருந்தவனை நல்லவனாக ஆக்குவதற்கான முயற்சியும், அவனை வேறு திசைக்கு கொண்டு போகிற முயற்சிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படி ஒருவனைப் பற்றிய கதை...
 "எவனும் புத்தனில்லை' தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் விஜயசேகரன். பிரபு சாலமனிடம் சினிமா கற்றுக் கோடம்பாக்கம் நுழைகிறார்.
 ஒட்டு மொத்த சமூகத்தையும் விமர்சித்தால் எப்படி...?
 எல்லாவற்றையும் கடந்ததுதான் இந்த வாழ்க்கை. இவ்வளவு நீளமான ஐ.பி.எல். நடத்தி கல்லா கட்டுபவர்களை, பெட்ரோல், கேஸ் விலையை ஏற்றி விட்டு பி.எம்.டபிள்யூ காருக்கு வரி குறைப்பவர்களை, பேரறிவாளனின் வாழ்வுரிமையைப் பற்றிப் பேசவே பயப்படும் அரசியல்வாதிகளை... கடந்ததுதான் இந்த வாழ்க்கை .
 கொலம்பியா காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்து கிடந்த சே-வின் விழிகளில், சிறுநீருக்குப் பை வைத்துக் கொண்டு இறுதிக் கணங்களிலும் பேசிய பெரியாரின் சொற்களில், பன்னிரண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில் இருப்பதற்கெல்லாம் பெயர் என்ன.. அற்பத்துக்கும் சொற்பதுத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம். அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகி விட்டது இந்தத் தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அப்படித்தான் இந்தக் கதையின் ஓட்டம் இருக்கும். எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம். இதில் வருகிற கதை நாயகன் தேர்ந்தெடுக்கிற வழிதான் முக்கியமானது.
 
 தனி மனித வாழ்க்கையையும் விமர்சிக்கிற கதை என்று சொல்லலாமா...?
 எல்லா இடங்களிலும் லஞ்சம், பொய், ஊழல் என மிடில் கிளாஸ் மாதவன் ஒருவர் தவறாமல் நம் தெரு முனை டீக்கடையில் கருத்துச் சொல்லுவார். ஆனால், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கம் நாம் நினைப்பது போல் இல்லை. ஆண்டு வருமானம் 40 ஆயிரம் என்று சொல்லி பொய் சான்றிதழ், சலுகைகளை அனுபவிக்கிறோம். இப்படிச் சூழ்ச்சியும் மாய மந்திரங்களும் நிரம்பி கிடக்கிற வாழ்க்கை இந்தச் சமூகத்துக்கு மட்டுமே உரித்தானது. இப்படிப் பல சலுகைகள் தன்னகத்தே இருந்தாலும், இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் சுக, துக்கங்களை மறந்து விட்டு ஓடுவதுதான் இங்கே காமெடி. ஆனால், பயங்கரக் காமெடியன்களாகச் சமூகத்தால் பார்க்கப்படுகிற எல்லோரும் காமெடியன்கள் அல்ல. அவர்கள் எல்லாம் காரியவாதிகள். சமூகம்தான் அவர்களைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறது. திருடுகிறவர்களை விட, மக்களின் சேவகராகத் தன்னை நிலை நிறுத்தி திருடுகிறவர்கள் இங்கே நிறையபேர். அப்படிப்பட்ட திருடுகிறவர்களின் உலகத்தை எட்டிப் பார்ப்பதுதான் இந்தப் படம்.
 
 ஏதாவது ஒரு சம்பவம்தான் கதை நோக்கி திருப்பியிருக்கும்.... அது என்ன....?
 மனதில் ஊறிப்போய் இருந்ததுதானே. எல்லாவற்றுக்கும் முன் மாதிரி உண்டு. எதுவும் தானாக உருவாக முடியாது என்பதுதான் இந்த உலகத்தின் சட்டம். படித்தது, பார்த்தது, கேட்டது, உணர்ந்ததுதான் படைப்பாக வருகிறது. சென்டிமென்ட் சினிமாவிற்கான வார்த்தையாகப் போச்சு. இதுகூடச் சென்டிமென்ட்தான். இந்தக் கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாகக் காட்சிப்படுத்தியதுதான் புதிது. கழுத்தில இருக்கிற வரைக்கும்தான் தங்கம். திருடன் கழுத்தில் கத்தி வைத்து விட்டால் இரும்பு குண்டு மாதிரி அதுவே கனக்கும். எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்
 படுத்திட முடியாது.
 
 படத்தில் தெரிந்த முகங்கள் இருக்கிறார்களா..?
 நிறையத் திட்டங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பட்ஜெட்டுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம். அதே நேரத்தில் கதையின் தன்மையைப் புரிந்தவர்கள் துணைக்கு வந்தார்கள். நபிநந்தி, ஷரத் இந்த இருவருமே புதுமுகங்கள்தான். ஆனால், பல ஆண்டுகளாக சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இதயங்கள். நல்ல அறிமுகத்துக்கு காத்திருந்தார்கள். தேடி வந்தார்கள். தகுதிகளும் இருந்தன. சேர்த்துக் கொண்டேன். நிகாரிகா, சுவாசிகா இரு நாயகிகளும் நீங்கள் பார்த்த முகம்தான். இருந்தாலும், நல்ல சினிமாவுக்காகக் காத்திருந்தார்கள். அவர்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறேன். இந்தக் கதையின் ஓட்டத்துக்குப் பிரதான கதாபாத்திரங்கள் ரொம்பவே முக்கியமானவை. அதில் மட்டும் எனக்கு சமரசம் இல்லை. வேல.ராமமூர்த்தி, சங்கிலிமுருகன், "நான் கடவுள்' ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து என எல்லாரும் அறிந்த முகங்கள்தான். எல்லோருக்கும் இந்தப் படத்தில் தனித்துவமான இடங்கள் உண்டு. வேல. ராமமூர்த்தியின் இடம் ஆச்சரியம் கொள்ள வைக்கும். கேரள எல்லையில் உள்ள ஒரு மலை கிராமத்தில் தங்கி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன்.
 - ஜி.அசோக்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com