எல்லா சூழலிலும்  மனிதனுக்கு நெருக்கடி!

""இயற்கை மனிதஉயிரினத்தை "யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று வாழ்கிற அடிப்படை தகுதியோடுதான் படைக்கிறது. அதன்பிறகு, எதை எல்லையாக, சொந்தமாக, பகையாகக் கொண்டிருக்கிறோம் என்பது நம்முடைய
எல்லா சூழலிலும்  மனிதனுக்கு நெருக்கடி!

""இயற்கை மனிதஉயிரினத்தை "யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று வாழ்கிற அடிப்படை தகுதியோடுதான் படைக்கிறது. அதன்பிறகு, எதை எல்லையாக, சொந்தமாக, பகையாகக் கொண்டிருக்கிறோம் என்பது நம்முடைய பயணத்தில்தான் இருக்கிறது. இந்த அடிப்படையை பேசுகிற களமாகத்தான் இது இருக்கும்!''

ஊரடங்கு உத்தரவிலும் உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மாணவர். இப்போது "யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் இயக்குநர்.

இந்த கதையின் ஆரம்பபுள்ளியாக எது இருந்தது...?

எந்த ஒரு விஷயம் செய்தாலும் அதுக்கு ஒரு காரண, காரியம் இருக்க வேண்டும். எல்லா சூழலிலும் மனித இன நெருக்கடி சர்வதேச அளவில் இங்கே இருக்கத்தான் செய்கிறது.

அதை அழுத்தமாக இந்தக் கதைக்களம் பேசும். கடந்த 2012} இல் இருந்து 2014 வரை கள ஆய்வு செய்து அதன்பிறகு படமாக்கும் வேலையில் இறங்கினேன். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் இந்த நேரத்தில் இந்தப் படத்தில் கையாளப்படும் மையப் பிரச்னையை ஒட்டியே மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேற்றி மாநிலங்களவையில் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

இப்போது நிலவும் அரசியல் சூழல்தான் பின்னணியா...?

இரண்டு நாயகிகள், ஒரு நாயகன் ஒரு பழங்கால தேவாலயத்தில் சந்திக்கும்போது அங்கே நடக்கிற விஷயங்கள்தான் இந்தப் படம். ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் தொடங்குகிற களம் இது.இதில் முழுக்க இசையின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும். ஒருவித செலிப்ரேஷன், ரொமான்ஸ் வகை களம் என்பதால் இசை ஒரு பயணமாகவே அமைந்திருக்கும்.

படத்தின் முடிவில் சின்னதாக ஒரு த்ரில் அனுபவம் உண்டு. கொடைக்கானல், திண்டுக்கல் பின்னணியில் நகரும். மார்கழி குளிரின் மணமும் வீசும். படத்தில் இசை ஒரு முக்கிய அங்கம் என்பதுபோல 150 ஆண்டுகால தேவாலயம் முக்கிய அம்சமாக இருக்கும். அதுதான் படத்தின் மையமும்கூட. அந்த சர்ச் பகுதி படப்பிடிப்பை செட், கிராபிக்ஸ் விஷயங்கள் கலந்து பிரம்மாண்டமாக படமாக்க திட்டமிட்டிருக்கிறோம்.

முதல் பட இயக்குநர்களின் தேர்வாக விஜய் சேதுபதியே இருக்கிறார்...

"புறம்போக்கு' படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தபோது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், "இவங்கிட்டே கதை கேளுங்க!'ன்னு என்னை விஜய்சேதுபதியிடம் அறிமுகம் செய்தார். முதலில் ஒரு பெரிய பட்ஜெட் கதையைத்தான் சொன்னேன். "இந்த நேரத்துல இவ்ளோ ஹெவியான பட்ஜெட் கதை வேண்டாம். வேறு கதை சொல்லுங்க?' என்றார். அந்தக் கதைதான் இது.
விஜய்சேதுபதி இல்லையென்றால் இந்தப் படமே இல்லை. இந்த நேரத்தில் இந்தக் கதையை கேட்டு நடிக்க சம்மதம் சொன்ன அவருக்கும், என்னை விஜய்சேதுபதியிடம் அறிமுகம் செய்துவைத்த என் இயக்குநர் ஜனா சாருக்கும், என்னோடு தொடர்ந்து பயணித்து வரும் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் ரத்னவேலு குமாருக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

மோகன் ராஜா, மகிழ்திருமேனி என இயக்குநர்கள் நடிக்கும் படமாகவும் வருகிறது..

இது முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்ததல்ல. இயல்பான விஷயமாகத்தான் பார்க்கிறேன். வழக்கமாக செய்யும் ஒரு விஷயத்திலிருந்து சற்று மாறுதலாக இருக்கட்டும் என செய்த முயற்சிதான் இது. இருவருக்குமே நல்ல பதிவாக இது இருக்கும்.

படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் அமலாபால் ஒப்பந்தம், பிறகு விலகல், அறிக்கை என பரபரப்பாக இருந்ததின் நிஜம்தான் என்ன?

அமலாபால் படத்தில் ஒப்பந்தம் ஆனதும், முழு கதையும் அவரிடம் படிக்க கொடுத்திருந்தேன். படத்தில் நாயகியின் பெயர் மெடில்டா. கதையை படித்த பிறகு என்னிடம் அவர் பேசும்பாது, "நான் மெடில்டா பேசுறேன்!' என்றே பேசுவார். எதிர்பாராத விதமாகத் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. மற்றபடி, அமலாபால் "ஆடை' படத்தில் நடித்ததால்தான் விலக்கப்பட்டார் என்கிற செய்தி பொய்யானது. அந்த மாதிரியான துணிச்சல், பார்வை கொண்ட ஒரு நடிகையை ஒரு படைப்பாளியாக நான் மதிக்கிறேன். அவரோடு அடுத்தடுத்த படங்களில் இணைந்து பணியாற்ற நான் ஆசைப்படுகிறேன்.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கையாளும் அரசியல் சினிமா... உங்களிடமும் தென்படுகின்றன..

"பேராண்மை', "புறம்போக்கு' ஆகிய படங்களில் வேலை பார்த்தேன். கமர்ஷியல் பின்னணியில் அரசியல் விஷயத்தை சத்தமாகப் பேச முடியும். அதில் வெற்றியும் காணலாம் என்கிற விஷயத்தை அவரது சினிமா பிரதிபலித்து வருகிறது.அந்த வகையான படங்கள் எல்லோரும் எடுக்கலாம் என்கிற துணிச்சலை அவர்தான் விதைத்தார்.

தயக்கமில்லாமல் அந்த பாதையில் பலரும் பயணிக்கின்றனர். எனக்கு சின்ன வயதில் இருந்தே இலக்கியம், அரசியல் பார்வை உண்டு. அந்தப் பார்வையோடு ஜனா சாரிடம் வந்து சேர்ந்தேன். அவர் அருகே அமர்ந்து பேசும்போது இருவரது கருத்துகளும் ஒரு நேர்கோட்டுக்குள் இருந்தது. அது என் பயணத்துக்குப் பெரும் நம்பிக்கையை கொடுத்தது.

குடியுரிமை சட்டம் பெரிய விவாதங்களை முன் வைத்துள்ளது.. அது சார்ந்த கதை களமா...?

சர்வதேச அளவில் உள்ள அகதிகள் பிரச்னைக்கு ஐ.நா சபையின் அகதிகள் சட்டத்தினை ஏற்றுக்கொண்டு இந்தியா கையொப்பம் இட்டாலே போதும். இங்கே இருக்கிற அகதிகள் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண முடியும். அதை விட்டுவிட்டு இந்தக் குடியுரிமை மசோதா சட்டம் என்பது மத ரீதியாகவும், இன ரீதியாகவும் பிரிவினையை உண்டாக்குகிற உள்நோக்கம் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com