இன்று தமிழக அரசே கலைவாணர் விழாவை நடத்துகிறது என்றால் அதற்குக் காரணம் கலைவாணர் நடந்து காட்டியதுதான்.
எனது 17-ஆவது வயதில் எனக்கு அரசியலைச் சொல்லி தந்தவர் கலைவாணர். நாடகக் கம்பெனியில் சமபந்தி போஜனத்தை உருவாக்க அரும்பாடுபட்டவர். மனிதன் ஒரு தத்துவத்துக்கு-கொள்கைக்கு சொந்தக்காரனாக இருக்க வேண்டும். பிறர் மதிக்கத்தக்க வகையில் அவன் வாழ்ந்தாக வேண்டும். இந்த இரண்டு கொள்கைகளையும் அவர் கற்றுத் தந்தார்.
ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லி காட்டியிருக்கிறார்.
ஒரு விஷயத்தை உங்களிடம் இன்று சொல்கிறேன். கலைவாணர் வாழ விரும்பாமல் தான் நம்மையெல்லாம் விட்டுச் சென்றார். கொடுத்த மாத்திரைகளை எல்லாம் சாப்பிடாமல் அவர் தூக்கி எறிந்து விட்டார். அந்த அளவுக்கு அவர் வேதனையில் இருந்தார்.
புகழும் பணமும் நிரந்தரம் என்று சிலர் நடக்கிறார்கள். அந்தக் காலத்தில்- கலைவாணர் செய்தது போல் தர்மம் யாரும் செய்யவில்லை. கலைவாணர் ஒரு சகாப்தம். ஆனால் அது முடிந்துவிட்ட சகாப்தம்.
இன்று அவர் இருந்திருந்தால் எனக்கு இந்தக் கஷ்டமில்லை. அவர்தான் முதலமைச்சராக இருந்திருப்பார். அவருக்கு நான் உதவியாக இருந்திருப்பேன்.
தமிழ்ப்பண்புக்கும், தமிழ் கலாசாரத்துக்கும் தமிழர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவருக்கு மரியாதை காட்டவே இந்த விழா நடத்தப்படுகிறது. தமிழரசு 1.10.1978 கலைவாணர் நினைவு நாளில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பேசியது.
ஆதாரம்: கழஞ்சூர் செல்வராஜி தொகுத்த கலைவாணர் என்.எஸ்.கே நூல்
தகவல்: தங்க.சங்கரபாண்டியன்
ஹிந்திப் படவுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்றால் அது ராஜேஷ் கன்னாவுக்கே பொருந்தும்!
அவர் காலத்தில் தொடர்ந்து 15 ஹிட் படங்களைக் கொடுத்து இன்று வரை யாராலும் முறியடிக்கப்படவும் இல்லை.
இருந்தாலும் ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது சொன்னார்:
கெளரவம், புகழ், அன்பு, வியப்பு கலந்த மதிப்பு என எதுவும் நிரந்தரமாக நிலைப்பதில்லை.
நேற்று என் இடத்தில் வேறு ஒருவர். இன்று நான். நாளை என்னிடத்தில் இன்னொருவர். அது அமிதாபச்சனாகக் கூட இருக்கலாம் என கோடிட்டு காட்டினார். அது உண்மையானது!
-ராஜிராதா