தனுஷ் ஜோடியாக "ஆடுகளம்' படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. "காஞ்சனா-2', "வந்தான் வென்றான்', "கேம் ஓவர்', "ஆரம்பம்', "வை ராஜா வை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிகப் படங்களில் நடித்தார். தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். அமிதாப்பச்சனுடன் நடித்த "பிங்க்" மற்றும் "நாம் சபானா', "பட்லா', "மிஷன் மங்கள்' உள்ளிட்ட படங்கள் அவரை முன்னணி ஹீரோயினாக உயர்த்தின. தற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதை, தமிழில் ஜெயம் ரவியுடன் "ஜன கண மன' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்தப் படத்துக்குப் பிறகு பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க டாப்சி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தினை இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். இவர், நடிகரும், இயக்குநருமான சுந்தர்ராஜனின் மகன் ஆவார். டாப்சி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இப்படத்தில் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை நடத்தி முடிக்கப் படக்குழு திட்டமிட்டு உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.