கவின் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "நெடுநீர்.' ராஜ்கிருஷ், இந்துஜா, சத்யா முருகன், மாகிரா கனகராஜ், மின்னல் ராஜா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் கு.கி. பத்மநாபன். படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""நம் கண் முன்னே கொட்டிக் கிடக்கிற மனித வாழ்க்கைதான் இந்தப் படத்துக்கான வடிவம். நீங்கள் எப்படி நினைத்தாலும் கதை, அப்படியே அதை பேசும். ஒரு சினிமா 2 மணி நேரம்தான், ஆனால் ஒவ்வொரு வாழ்க்கையும் 24 மணி நேரம். வாழ்க்கைதான் இங்கே யோசிக்கவே முடியாத சினிமா. உங்களை கடந்து போகிற ஒவ்வொரு எளிய மனிதனும் இந்த சினிமாவில் தென்படுவான். ஒரு காதல், ஒரு சம்பவம், ஒரு பிரச்னை.. என எதையும் இந்தக் கதையில் முன்னிலைப்படுத்திப் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் அதைச் சுற்றியிருக்கிற மனிதர்களை விட்டும் அகல முடியாது.
எழுதுவதும், பேசுவதும், சினிமா எடுப்பது சந்தோஷத்துக்காக மட்டுமேதான். சக மனிதர்களின் அன்பும், அரசியலும்தான் இங்கே மூலதனம். சில சமானியர்களின் குறிப்புகள் என்று கூட இதைச் சொல்லலாம். சிறு வயதில் பிரிந்த சொந்த கிராமத்தை விட்டுத் துரத்தப்படும் ஒரு ஜோடி, ஒரு சூழலால் பிரிய நேரிடுகிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பின் இருவரும் எதிர் எதிரான நிலையில் சந்திக்கிறார்கள். உயிரை காப்பாற்றுகிற இடத்தில் அவளும் உயிரை எடுக்கிற இடத்தில் அவனும் இருக்கத் தொடர்ந்து நிகழும் பரபரப்பு மிகுந்த சம்பவங்களே திரைக்கதை. விரைவில் படம் திரைக்கு வருகிறது. ஒளிப்பதிவு - லெனின் சந்திரசேகரன். இசை - ஹித்தேஷ் முருகவேல். பாடல்கள் - பழநிபாரதி, கானா மெய்யழகன்.