தினமணி நாளிதழ் 86-ஆவது ஆண்டுத் தொடக்கத்திற்கு வருவதை அறிந்து பெரிதும் பெருமை அடைகிறேன். எனக்கு விவரம் தெரிந்து எழுத்துக்களைக் கூட்டி படிக்கத் தெரிந்த காலத்திலிருந்து இன்று வரை தினமணி வாசகராக இருந்து வருகிறேன்.
எப்படியென்றால் என் தந்தை பொன்னுசாமி பிள்ளை, பெரம்பலூரில் சிறிய நகை கடை வைத்து நடத்திக் கொண்டு இருந்த காலத்திற்கு முன்பு இருந்தே (1948-ஆம் ஆண்டுக்கு முன்பு) தினமணி வரவழைத்துப் படித்துக்கொண்டு இருந்தார். தினமணியைத் தவிர வேறு நாளிதழை அவர் விரும்பி படித்ததில்லை. தினமணியின் தீவிர வாசகராக இருந்தார். அவர் ஒரு காந்தியவாதியாக வள்ளலாரின் பக்தராக, தினமணியின் வாசகராக இருந்தார் என்றே சொல்லாம். இந்தக் காலகட்டத்தில் பல ஆண்டுகளாக தினமணி ஏஜென்டாக இருந்தவர் மதனகோபாலபிள்ளை.
என் தந்தை 1972-ஆம் ஆண்டு இறந்த அன்று காலையில் கூட தினமணியை வாசித்துக்கொண்டு இருந்தார். இதன்பின் கடையின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு பல ஆண்டு கழித்து ஒரு நாள் சரஸ்வதி பூஜைக்காக அவருடைய சிறிய கண்ணாடி பெட்டியில் கண்ணாடிக்கு கீழ் பகுதியில் என் தந்தையால் ஒரு பேப்பர் போடப்பட்டு இருந்ததை நான் பார்த்தேன். எனக்கு ஒரே ஆச்சரியம் அந்த பேப்பர் 19-10-1939-ஆம் ஆண்டில் வந்த தினமணி நாளிதழாக இருந்தது. காலத்தால் சிறிது மக்கிப்போய் இருந்தாலும் நான்கு பக்கங்கள் கொண்ட அந்த இதழை இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
இது போல் பல ஆண்டுகளுக்கு முன்பு தினமணியோடு சேர்த்து ஞாயிறுதோறும் தினமணி சுடர் என்ற இணைப்பு வந்துகொண்டு இருந்தது. அதில் ராசிபலன், கட்டுரைகள், கதைகள் என்று பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாக இருக்கும். அதில் ஒரு குரங்கைப் பற்றிய ஒரு கதை தொடராக வரும். மிக அருமையான கதையைப் படித்த ஞாபகம் எனக்கு உண்டு.
இப்பொழுதும் பல ஆண்டுகளாகத் தினமணியில் வெளிவரும் முக்கியக் கட்டுரைகள் தினமணி கதிர், வெள்ளிமணி, சிறுவர்மணி, மகளிர் மணி, இளைஞர்மணி, கொண்டாட்டம் போன்ற இணைப்புகளைச் சேர்த்து வைத்துக்கொண்டு இருக்கிறேன்.
என் தந்தையைப் போல இறுதி நாள்வரை தினமணி படிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
கட்டுரையாளர்:
இலக்கிய, பட்டிமன்ற பேச்சாளர், பெரம்பலூர்