பூர்வீக மக்களின் சரிதம்!

வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும் அதில் ஆச்சரியங்கள் நிறைந்து கிடக்கிறது. அப்படித்தான் இது.
பூர்வீக மக்களின் சரிதம்!

வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும் அதில் ஆச்சரியங்கள் நிறைந்து கிடக்கிறது. அப்படித்தான் இது. பெரிய திட்டமிடல் இருந்தது. ஈரமான மனசுகள் நாம் எதிர்பார்க்காத இடங்களில் இருக்கிறது. எங்கே கிரிமினல்கள் உருவாகி வருகிறார்கள் என்று தேடினால், உங்களுக்குக் கிடைப்பது எதிர்பாராத திருப்பங்கள். உங்களின் சந்தோஷத்திற்கும், நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் கேரண்டி. முழுப் படத்தையும் கையில் வைத்துக் கொண்டுதான் நம்பிக்கையோடு பேசுறேன். நானே ரசிக மனப்பான்மையால் பார்த்து ரசித்துதான் சொல்கிறேன். ஆர்வமாகப் பேசத் தொடங்குகிறார் ரமேஷ் ஜி. "ஆழ்வார்', "நாளை‘, "கிங்' உள்ளிட்ட படங்களின் மூலம் ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்தவர். சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்குநராகக் களம் இறங்குகிறார்.

அடவி... தலைப்பே கவனம் ஈர்க்கிறது....

அடவி என்றால் அடர்ந்த காடு எனப் பொருள். காடுகளைப் பாதுகாப்போம் என்பதுதான் இந்தக் கதையின் ஆதாரம். 70-களில் இந்தியா முழுமையும் "சிக்கோ மூவ்மெண்ட்' என்று ஒரு முயற்சி நடந்தது. மலைவாழ் மக்களைக் காடுகளை விட்டு வெளியேற்றும் முயற்சி அது. பெண்கள் மரங்களைக் கட்டிப்பிடித்து வனங்களை விட்டு வெளியேற மறுத்த காட்சிகள் அப்போது பத்திரிகைகளில் வெளிவந்தன. அந்தப் போராட்டம் இந்தியா முழுமையும் பரவி நீண்டது. அது போன்று இப்போதும் பல போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஆங்காங்கே நடக்கிற சம்பவங்களின் சிறு துளிதான் இது. இங்கே தமிழகத்தில் வாழுகிற பழங்குடி இன மக்களும், அங்கே சொகுசு ரிசார்ட்டுகளைக் கட்ட வருகிற ஒரு குழுவுக்குமான சம்பவங்களாக அதைத் தொகுத்து பின்னி வந்திருக்கிறேன். காதல் இங்கே முக்கியப் பங்கு வகுக்கிறது.

எப்படி உருவானது....

இந்தக் கதை அப்படியே மனதில் இருக்கிற சித்திரம். விளைநிலத்தைக் கூறு போட்டு விற்றுக் இருக்கிறோம். மலையைக் குடைந்து எம் சாண்ட் ஆக்கி கட்டடம் கட்டுகிறோம். விவசாயிகள் எல்லாம் சென்னை பக்கம் வந்து ஏ.டி.எம்., பங்களா, ஐ.டி. வாசலில் செக்யூரிட்டியாக நின்று கொண்டு இருக்கிறார்கள். இப்படிப் பல விஷயங்கள் கதைக்குள் என்னை இழுத்துப் போனது.

சோறு இல்லை என்பதுதான் எதிர்காலக் குரலாக இருக்கப்போகிறது. தொழில்புரட்சி பசியைப் போக்காது. விஞ்ஞானத்திற்கு அரிசியை மந்திரம் மாதிரி உருவாக்கத் தெரியாது. பழங்குடி இன மக்களின் குரலை பதிவு செய்திருக்கிறேன். இது நம் மண்ணின் கதை. நம் பூர்வீக மக்களின் சரிதம். இது வேறு மாதிரி இருக்கும்.

எந்த மாதிரியான கையாளுகை கதையில் இருக்கும்....

தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிப்போம் என்று நினைத்துக் கூடப் பார்த்தது கிடையாது. ஆனால், நாளை காற்றுக்கும் காசு கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிய நிலை வரும். நடப்பவற்றைப் பார்த்தால், அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மீத்தேன் தொடங்கி இப்போது பரபரப்பாகப் பேசுகிற 8 வழி பசுமைவழிச்சாலை வரைக்குமான போராட்டங்களும், உணர்வுகளும் இதில் உண்டு.

இயற்கைக்கும், அது தருகிற செல்வத்திற்கும் அங்கே இருக்கிற மக்கள் அமோகமாக இருக்க வேண்டும். ஆனால், நிலைமை என்ன? இயற்கை அழிந்துகொண்டு இருக்கிறது.

அதனால் இழப்பு, நமக்குத்தானே தவிர இயற்கைக்கு இல்லையென்று யாருக்கும் தெரியவில்லை. மலை மக்களின் குரல் இதிலே பதிவாகியுள்ளது. சொல்லப்போனால் இதில் என் குரலும், உங்களின் குரலும் அடங்கியிருக்கிறது. எந்த விதத்திலும் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் பிரதானப் பகுதி. மலை மக்களிடம் மிச்சம் இருப்பவை வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும், நம் மண்ணின் சொற்களும்தான். ஏதோ ஒரு நாளில் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேறும் அல்லது விரட்டப்படும் கணங்கள் செத்துப் போகிற வரைக்கும் மறக்குமா என்ன....?

சுற்றுலா வளர்ச்சி என்பது இங்கே இன்றியாமையாத விஷயமாகவும் மாறி வருகிறது...

அது தவறில்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது. இதோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, எத்தனை தமிழ் கிராமங்களின் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறோம். பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதிப் பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள்.

நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சரிபாதி குற்றங்கள் தொலைந்து விடும். தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்குப் பணம் இல்லை. பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்கத் தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். வயிற்று பசிக்குச் சாப்பிடத்தான், நமக்குப் பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும்போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அவர்களை விட்டு விடுங்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லி விட முடியும்.

ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டுமே பெரும் பொறுப்பு... எப்படி சமாளித்தீர்கள்?

பெரிய திட்டமிடல்கள் இருந்தன. சமூகம் சார்ந்த படம் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே கொண்டு வந்திருக்கிறேன். பருவம் தப்பிய மழை. எல்லாமும் மாறி விட்டது. இதோ இன்னும் சென்னைக்கு சரி வர மழை இல்லை.
இயற்கையின் சமநிலைக்கே எதிரான இயற்கையின் வியூகங்கள் வந்து விட்டன. இதையெல்லாம் ஆராய்ந்து கதை எழுதினேன். அங்கே ஒரு காதல், கலாசாரம், பண்பாடு என்று கதை தனக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டது. வினோத் கிஷன், "அம்மு' அபிராமி என பக்க பலம் கொண்ட நடிகர்கள் துணைக்கு வந்தார்கள். தயாரிப்பாளர் உள்ளிட்ட எல்லோருக்கும் நன்றிகள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com