அடுத்து எனக்கு வந்த படம் "பிரேம பாசம்'. இதில் சாவித்திரி அம்மாதான் கதாநாயகியாக நடித்தார். அவருடன் கே.சாரங்கபாணி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, வி.கே.ராமசாமி, டி.பி.முத்துலட்சுமி, ஈ.வி.சரோஜா, பாலாஜி, கே. வரலட்சுமி, போன்றோர் நடித்தார்கள். இந்தப் படத்தின் இசை எஸ். ராஜேஸ்வர ராவ். படம் வெளியானது மார்ச் மாதம், 1956 -ஆம் ஆண்டு என்று நான் நினைக்கிறேன். சாவித்திரி அம்மாவின் சிறுவயது பெண்ணாக நடித்தேன். இந்தப் படத்தைத் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுத்தார்கள். இந்த இரு மொழிகளிலும் நான் தான் அந்த வேடத்தைச் செய்தேன். காரணம், என்னால் இரண்டு மொழிகளிலும் பேச முடியும் என்பதால் என்னையே நடிக்கச் சொன்னார்கள்.
தெலுங்கு படத்தின் பெயர் “"பலே ராமுடு'”. அந்தப் படத்தின் படப்பிடிப்பு நரசு ஸ்டூடியோவில் நடைபெற்றது. அன்றும் கிட்டத்தட்ட எல்லா ஸ்டூடியோக்களும் கோடம்பாக்கத்திலேயே இருந்தன. இன்றும் சில இருக்கின்றன. இந்த நரசு ஸ்டூடியோ ஒன்று தான் கிண்டியில் இருந்தது. நரசு காபி முதலாளி தான் இந்த ஸ்டூடியோவையும் சொந்தமாக நடத்தி வந்தார். அவர் தான் சிவாஜி கணேசன், பத்மினி நடித்த "ஸ்ரீவள்ளி' என்ற படத்தையும் தயாரித்தவர்.
கிண்டியில் உள்ள நரசு ஸ்டூடியோ சில காலம் "கோகோகோலா' பானம் வைக்கும் இடமாக மாறியது. அப்பொழுது அந்த ஸ்டூடியோவில் மேலாளராக இருந்தவர் யார் தெரியுமா? பல படங்களை எடுத்த பிரபல தயாரிப்பாளர், நடிகர், எல்லாவற்றையும் விடச் சிறந்த மனிதர். அவர்தான் நடிகர் பாலாஜி. அவர் அங்கு மேலாளராக இருந்தார்.
"பிரேம பாசம்' படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி ஜோடியாக நடித்தார்கள். அந்தப் படத்தில் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் அதிகம் இடம் பெறுவதால், எனக்கு சைக்கிள் ஒட்டத் தெரியுமா? என்று கேட்டார்கள். எனக்கு அன்று சைக்கிள் ஓட்டத் தெரியாது. அந்த உண்மையை சொன்னேன். எல்லோரும் கூடிப் பேசினார்கள். பல காட்சிகள் சைக்கிளை நான் ஓட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெறுவதால் சைக்கிள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்கள்.
எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாததால், நானும் சரி என்று தலை ஆட்டினேன். எப்பொழுதுமே புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் எனக்கு எப்பவுமே சந்தோஷமாக இருக்கும்.
எனக்கு யார் சைக்கிள் ஓட்டத் கற்றுக் கொடுப்பது என்று யோசித்து, நடிகர் பாலாஜியிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். அவர் தானே அங்கு மேனேஜராக இருந்தார். எனக்காக ஒரு சைக்கிளை வாங்கி, அந்த ஸ்டூடியோ முழுவதும் ஓட்ட கற்றுக் கொடுத்தார். முதல் நாள் அன்று சைக்கிள் பெடலை மிதிப்பதே கஷ்டமாக இருந்தது. பல இடங்களில் விழுந்து கொஞ்சமாக சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டேன். இதில் பாலாஜியிடம் நான் பல தடவை கெஞ்சி இருக்கிறேன். அவர் சொல்லாமல் கொள்ளாமல், சைக்கிளை பிடிக்காமல் விட்டு விடுவார். நான் விழுந்து விடுவேன். “"ஏன் பிடிக்கவில்லை', என்று கேட்டால், “"படத்தில் நான் பிடிக்க முடியுமா? நீ தான் தைரியமாகச் சைக்கிளை ஓட்டவேண்டும்' என்று சொல்லி எனக்கு ஓட்டக் கற்று கொடுத்தார்.
நான் பிடித்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு, நைசாக விட்டு விடுவார். அப்புறம் நான் விழுந்து விடாமல் ஓட்டும் வண்ணம் அவர்தான் எனக்குக் கற்று கொடுத்தார். இந்தப் படத்தில் ஜெமினி கணேசனுக்கு ஒரு தம்பி வேடம் இருந்தது. யார் இந்த வேடத்தைச் செய்வது என்று பலரையும் யோசித்துப் பார்த்தார்கள். அப்பொழுது ஜெமினி கணேசன் பாலாஜியை சிபாரிசு செய்யதார்.
கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு, ஏன் நீங்கள் நெய்யுக்கு அலைகிறீர்கள். உங்கள் பாலாஜி அழகாக இருக்கிறார். எனது தம்பி பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார். பாலாஜியை நடிக்க வைக்கலாம் என்று ஜெமினி கணேசன் சொல்ல, அந்தப் படத்தில் பாலாஜி அறிமுகமானார்.
அந்தப் படத்தின் இயக்குநர் வேதாந்தம் ராகவையா. அவர் சிறந்த நடன அமைப்பாளர். மிகச் சிறப்பாக நடனமாடுவார். மற்றவர்களுக்கும் நடன அசைவுகளைக் கற்றுக் கொடுப்பார். இது மட்டும் இல்லாமல் நடிகர், நடிகையர்கள் முடிந்தவரை நடனமோ, சண்டை காட்சிகளையோ அவர்களே நடிக்க வேண்டும் என்று விரும்புவார், அதை வெளிப்படையாகவும் சொல்லுவார்.
அந்தப் படத்தின் ஒரு காட்சியில் மாடியில் இருந்து என்னைத் தள்ள, நான் உருண்டு விழவேண்டும். காட்சிப்படி எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பமும் நெருங்கிய சொந்தக்காரர்கள் தான். நாங்கள் அவர்களிடம் கொடுத்துள்ள பணத்தைத் திருப்பிக் கேட்கும் போது, அவர்களில் ஒருவர் என்னைப் பிடித்துத் தள்ளும் போது, நான் படிகளில் உருண்டு விழவேண்டும். அப்படி உருண்டதால் எனக்குக் கால் ஊனமாகி விடும். பின்னாளில் வயது ஏற ஏற, சாவித்திரி அம்மாவுக்கும் கால் ஊனம் நிரந்தரமாகி விடும். சின்ன வயசு சாவித்திரியாக நான் நடித்ததால் எனக்கு என்ன நடக்கிறதோ அது அவருக்கும் தொடரும்.
முதலில் எனக்குப் பதில் வேறு ஒரு குழந்தையை (டூப் போட்டு) எடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அந்தக் குழந்தை தள்ளி விட்ட பிறகு உருண்டது, ஏனோ அவர்களுக்குத் திருப்திகரமாக இல்லை . என்ன செய்வது என்று தெரியாத நிலையில், இயக்குநர் வேதாந்தம் ராகவையா என்னிடம் வந்து, “"அந்த குழந்தை உருண்டது, எங்களுக்குத் திருப்தியாக இல்லை. சச்சு நீயே இந்த உருளும் காட்சியில் நடிக்கிறாயா?'” என்று கேட்டார். அந்தக் காட்சி எடுக்கும் போது நானும் அந்தப் படப்பிடிப்புத் தளத்திலேயே இருந்தேன்.
நான் முன்பே சொல்லியது போல், எனக்கு என்றுமே, எதற்காகவும் பயம் இல்லை. இயக்குநர் வேதாந்தம் ராகவையா கேட்டவுடன், நான் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், “"பண்றேன் சார், நானே பண்றேன்' என்று சொன்னேன். நான் மாடிப் படிக்கட்டிலிருந்து உருள தயாரானேன். அதற்குள் என் பாட்டி என்னிடம் வந்து, “"என்னிடம் வந்து யாரும், எதுவும் சொல்லவில்லை. யாரையும் கேட்காமல், நீ ஏன் ஒத்துக்கொள்கிறாய். மாடிப் படிக்கட்டு மிகவும் உயரமாக இருக்கிறது. நீயோ குழந்தை, உருளும் போது , ஏதாவது நடந்தால் யார் பொறுப்பு? சில விஷயங்களில் யோசித்து முடிவு செய்யவேண்டும்' என்றார்.
"நான் பார்த்துக் கொள்கிறேன், பயப்படவேண்டாம்' - என்று பாட்டிக்கு நான் ஆறுதல் வார்த்தைகளைச் சொன்னேன். எல்லோரும் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்யப் போனார்கள். இந்த மாதிரி ரிஸ்க் காட்சிகளைச் செய்ய நான் என்றுமே தயங்கியதில்லை. இன்னும் சொல்லப் போனால் எனக்குப் பிடித்தமான காட்சிகள் இவை தான் என்று கூடச் சொல்லலாம். இன்று கூட வயது வித்தியாசம் பார்க்காமல் மாடியிலிருந்து குதி என்றால் நான் தயங்காமல் குதித்து விடுவேன்.
சமீபத்தில் நான் நடித்த “"நந்தினி'” தொலைக்காட்சி தொடரில் ஒரு காட்சியில் என்னை மயங்கி விழ சொன்னார்கள். டைரக்டர் ராஜ்கபூர் என்னிடம் வந்து, “"நீங்கள் மயங்கி விழும் காட்சி. நீங்கள் கண்களை மூடி மயக்கமடைவது போல் நடித்தால் போதும். அடுத்த ஷாட் நீங்கள் கீழே படுத்திருக்கும் காட்சியைக் காண்பித்து, நீங்கள் மயங்கி விட்டீர்கள் என்று ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்' என்றார். மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றாலும் நாமே நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று எனக்கும் தோன்றியது. காமிரா ஓடும் போது நான் மயங்கி விழும் காட்சியில், நிஜமாகவே மயங்கி விழுந்தது போல் நடிக்காமல், தடாலென்று நான் தரையில் விழ, எல்லோரும் பயந்து விட்டார்கள்.
இயக்குநர் ராஜ்கபூர் என்னிடம் வந்து, "“என்னம்மா இப்படி விழுந்து விட்டீர்களே. நான் மிகவும் பயந்து விட்டேன்' என்று சொல்ல, நான் அதற்கு என்ன சொன்னேன் தெரியுமா. "“நடிப்பின் மீது உள்ள ஈர்ப்பு தான் எங்களை எல்லாம் இப்படிச் செய்ய வைக்கிறது. நாங்கள் இப்படிச் செய்வதால் ஆண்டவன் கண்டிப்பாக எங்களைக் காப்பாற்றுவார் என்று நான் திடமாக நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் இதுவரை எனக்குத் துணை நிற்கிறது' என்று சொன்னவுடன் இயக்குநர் ராஜ்கபூர் என்னைப் பார்த்து வணங்கிச் சென்றார்.
வயது ஏற ஏற குழந்தை நட்சத்திரமாக இருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தைப் பருவத்தை விட்டு வெளியே வர, தங்கை, அக்கா கதாபாத்திரங்கள் என்னை நாடி வரத் தொடங்கின.
நான் என்றுமே வீட்டில் சும்மா உட்கார்ந்ததில்லை. இந்தச் சமயத்தில் "கோடீஸ்வரன்' என்ற ஒரு படம் வந்தது. அதில் நடித்தவர்கள் இருபெரும் நட்சத்திரங்கள். ஒன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றது வீணை எஸ்.பாலசந்தர். அதன் இயக்குநர் சுந்தர் ராவ் நாட்கர்னி. இவர் மிகப்பெரிய இயக்குநர். இவருடைய இயக்கத்தில் நடிப்பதில் எனக்கு மட்டும் அல்ல, எங்கள் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டோம். அதே போன்று இன்னொரு மிகப் பெரிய டைரக்டர் கே. சுப்ரமணியம். இவர் இயக்கத்தில் நான் நடித்த படம் என்ன தெரியுமா?. அடுத்த வாரம் சொல்கிறேன்.
(தொடரும்)
சந்திப்பு: சலன்