ரஜினி நடித்த "பேட்ட' படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விஜய் ஜோடி யாக "மாஸ்டர்' படத்தில் நடிக்கிறார். மாளவிகாவின் நடிப்பை இனிமேல்தான் முழுமையாகப் பார்க்க போகிறோம் என்றாலும் அவரது அழகான தோற்றம் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது. நடிப்பு தவிர மாளவிகா மோகனன் புதிய திறமை வளர்த்துக் கொண்டிருக்கிறார். காட்டுப் பகுதிகளுக்குள் சென்று வனவிலங்குகளைப் பிரத்யேகமாகப் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
"வனவிலங்குகளைக் காட்டுப் பகுதிகளுக்கே சென்று புகைப்படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம்.இந்தியா முழுவதும் பல்வேறு அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் சென்று சிங்கம், யானை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் புகைப்படம் எடுத்திருக்கிறேன். அவற்றின் வாழ்வியலை நேரில் ஆராய்ந்திருக்கிறேன். குறிப்பாக வயநாடு, கபிணி, மாசினங்குடி காட்டுப் பகுதிகள் மறக்க முடியாதவை. காட்டுப்பகுதிக்குள் சென்று தனியாக சிங்கத்தின் முன்னால் நின்று அவற்றைப் படமாக்குவது என்பது த்ரில்லான அனுபவம்' என்றார் மாளவிகா மோகனன்.