நயன்தாரா பாணியில் தனக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார் அமலாபால். இந்த வரிசையில் இவர் நடிக்கும் அடுத்தப் படம் "அதோ அந்தப் பறவை போல'. அட்வெஞ்சர் திரில்லர் பாணி படமாக இதன் கதைக் கரு அமைக்கப்பட்டுள்ளது. ஜோன்ஸ் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படம் குறித்து அமலாபால் பேசும் போது....
"இந்தப் படம் ரொம்ப சந்தோசத்தைக் கொடுத்தது. சில படங்களில் நடிக்கும் போதுதான் மகிழ்ச்சி உண்டாகும். என்னை முன்னிலைப்படுத்துவதை விட, யாரும் நடிக்கத் தயங்குகிற கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன். "ஆடை' அந்த மாதிரி படமாகத்தான் வந்திருந்தது. இந்தப் படமும் தயாரிப்பாளருக்கு கண்டிப்பாக நல்ல லாபத்தைக் கொடுக்கும். காரணம் படத்தின் கதை. ஓர் இளம்பெண் எந்த உதவியுமே இல்லாமல் தனி ஆளாக காட்டில் சிக்கிக் கொண்ட பிறகு, அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பது கதை. பெண்களின் பாதுகாப்பு என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பது பெரிய விவாதமாக இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் இந்தப் படம் வருவது எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது'' என்றார்.