நடிகை சிம்ரன் 1997-ஆம் ஆண்டு வெளியான "ஒன்ஸ்மோர்', "விஐபி' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த சிம்ரன், தனது நடனத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியானார்.
திருமணம் செய்து கொண்ட சிம்ரன், 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை அதிகம் படங்களில் தலைகாட்டவில்லை. அதற்கு பின்னர் தமிழில் "துப்பறிவாளன்' , "சீமராஜா' உள்ளிட்ட படங்களின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். மாதவனுடன் "ராக்கெட்ரி: நம்பி விளைவு', "துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட படங்கள் சிம்ரன் நடிப்பில் வெளிவர காத்திருக்கின்றன.
"ஒன்ஸ்மோர்', "விஐபி' உள்ளிட்ட படங்கள் வெளியாகி 23 ஆண்டுகளைக் கடந்திருக்கும் நிலையில், அதைக் குறிப்பிட்டு நடிகை சிம்ரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான கருத்து பதிவிட்டுள்ளார். அதில், "சிவாஜி கணேசன் சாருடன் இணைந்து நடித்த நினைவுகள் 23 ஆண்டுகளுக்குப் பின்னரும் தெளிவாக உள்ளன. கனவு நிறைவேறிய தருணம் அது. அவருடைய வாழ்த்தும், அவரிடமிருந்து கற்றுக் கொண்டதும் தான் என்னை உருவாக்கியது என்று நினைக்கிறேன்.
நண்பர் விஜய், பிரபு தேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோருடன் தமிழில் என் பயணத்தை ஆரம்பித்தது அதிர்ஷ்டம் எனச் சொல்வேன். என் கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாகயிருப்பேன்'” என்று கூறியுள்ளார்.