இயக்குநர் கே. பாலசந்தரின் ஆரம்ப கால நாடகங்களுக்கு இசையமைத்தவர் பி. கணேஷ்குமார். நாடகங்களைத் தொடர்ந்து சினிமா என்ற வழக்கமான வரிசைக்கு வராமல், மேற்கத்திய இசை, கர்நாடக இசை என மாற்றுக் களங்களை நோக்கி பயணமானார்.
இப்போது இளையராஜா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே செய்த சாதனையான சிம்பொனி இசையை அடைந்திருக்கிறார். மேற்கத்திய இசையில் சிம்பொனி இசைக் கோர்வையை உருவாக்கியது இவரது புது சாதனையாக கருதப்படுகிறது. இசை மூலமாக உலக அமைதியை உருவாக்க சிம்பொனி இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். "ஸ்பிரிட் ஆப் ஹ்யூமானிட்டி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் சிம்பொனி ரைஸ் ஜர்னி, சிம்பொனி போயம் என இரு பகுதிகள் இடம் பெறுகின்றன. சிம்பொனி இசை மேதை பீதோவனின் பாணியில் சீன தத்துவ மேதை கன்பூஷியஷின் தத்துவ கருத்துக்களும், குஜராத் மன்னர் ஜாம் சாகேப் திக் விஜய் சிங்கின் மனிதாபிமான செயல்களும் இதில் இடம் பெறுகின்றன. கோர்வையின் இறுதியில் தமிழ் மன்னர் கடலுள் மாய்ந்த இளம் பெரும்வழுதி எழுதிய "உண்டால் அம்ம இவ்வுலகம்' என்ற புறநானுற்றுப் பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் 26-ஆம் தேதி அமெரிக்காவின் நவோனா ரிக்கார்ட்ஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடவுள்ளது.