கி.ஆ.பெ.விசுவநாதம் "முத்தமிழ்க் காவலர்' என அழைக்கப்பட்டவர். சித்த மருத்துவத்தை மக்களுக்கு சிறப்பாக அறிமுகமாக செய்வதில் சிறப்பாக உழைத்தவர். பல பட்டங்களை பெற்றவர். அவருக்கு ஆரோக்கியம் குறித்த அக்கறை அதிகம். 95 வயது வரை வாழ்ந்தவர். ஆரோக்கியம் பற்றி அவர் கூறியது:
""எனக்கு இதுவரை நோயே வந்ததில்லை. ஊசியோ மருந்தோ பயன்படுத்தியதில்லை. எனது ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம் நல்லொழுக்கமும், உணவுகளில் கட்டுப்பாடும் தான்.
நாள்தோறும் ஒரு மணி நேரம் வெயிலை தாங்கும் உடம்பு, ஒரு மணி நேரம் மழையையும் தாங்கும். வெயில் படாத குழந்தைகளின் மீது மழையோ, பனியோ படக்கூடாது. பட்டால் இளமையிலேயே உடல் நலம் இழந்துவிடும்.
வெயில், பனி, மழை, காற்று ஆகிய நான்கும் மக்கள் உடலுலை உறுதி செய்யும் இயற்கைச் செல்வங்கள். உடலுக்கு உணவுத் தேவை. அது போன்று உணவை உண்ணும் உடலுக்கு உழைப்புத் தேவை. உடல் நலச் செல்வம் உழைப்பின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. பொருள் செல்வம் தேட முயற்சி தேவை. உடற்பயிற்சியின்றி உடற் செல்வத்தைப் பெற முடியாது.
குறைந்த தொலைவில் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டுமானால் நடந்து செல்ல வேண்டும்.
உணவே மருந்து மருந்தே உணவு.நாம் உண்ணுகின்ற உணவுப் பொருள்கள் அனைத்தும் சுக்கு, மிளகு, திப்பிலி, பூண்டு சீரகம், கடுகு, கீரை வகைகள், பழ வகைகள் என யாவும் மருந்து தான். உடலை நெடுநாள் அழியாது காப்பாற்றும் திறன் இந்த பொருள்களுக்கு உண்டு. உணவு முறை, உடற்பயிற்சி, எண்ணெய் குளியல் போன்றவற்றால் நீண்ட நாள் வாழமுடியும்.
நோய் வராமல் தடுப்பவன் அறிஞன். வந்தபின் தடுப்பவன் மனிதன். மக்கள் முயன்று நோய் வராமல் தடுத்து வாழ வேண்டும்.