ரத்தத்தின் ரத்தமே... - 29

ஷேக்ஸ்பியரின் அனைத்து நாடகங்களிலும், ஒரே ஒரு முறையாவது ரத்தம் பற்றிய வார்த்தை வராமலிருக்காது.
ரத்தத்தின் ரத்தமே... - 29


ஷேக்ஸ்பியரின் அனைத்து நாடகங்களிலும், ஒரே ஒரு முறையாவது ரத்தம் பற்றிய வார்த்தை வராமலிருக்காது.

கர்ப்பிணிப் பெண்களின் உடலில் ஜந்தாவது மாதம் ஆரம்பித்ததிலிருந்து, அவர்களின் உடலிலுள்ள ரத்த அளவு சுமார் 50 சதவீதம் அப்படியே கூடிவிடும். வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தையையும் சேர்த்து வளர்க்கத் தான் இந்தக் கூடுதல் ரத்தம்.

ஒரு அவுன்ஸ் அதாவது சுமார் முப்பது மில்லி லிட்டர் ரத்தத்தில், சுமார் 15000 கோடி சிவப்பணுக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு விநாடியும் சுமார் 20 லட்சம் சிவப்பணுக்கள் நமது உடலில் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன. ஏதாவது நமக்கு பிரச்னை ஏற்பட்டுவிட்டாலோ, சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டாலோ, அந்த நேரத்தில் நமது உடல் சுமார் 7 மடங்கு அதிகமாக சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும்.

ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களுக்கு உட்கரு கிடையாது. அதனால், உள்ளே காலியாகத் தான் இருக்கும். அதனால் ஒவ்வொரு சிவப்பணுக்களின் உள்ளே நிறைய வெற்றிடம் இருக்கும். அதனால் "ஹீமோகுளோபின்' என்று சொல்லக்கூடிய மிக முக்கிய இரும்புச்சத்துப் பொருளை நிறைய அடைக்க முடியும்.

சிவப்பணுக்கள் வட்டவடிவ உருவில் இருக்கும். நடுவில் குவிந்து பள்ளமாகவும், ஓரத்தில் தடித்து மேடாகவும், சிவப்பணுக்கள் இருக்கும். அதனால் மிகமிகச் சிறிய ரத்தக் குழாய்களில் கூட சிவப்பணுக்கள் இரண்டாகவோ, நான்காகவோ மடிந்து, வளைந்து, சிறிதாகி ரத்தக் குழாய்களுக்குள் நுழைந்து ஓடிவிட முடியும்.

75 வயது நிரம்பிய ஒருவரின் இருதயம், அவரது ஆயுளில் 2.5 பில்லியன், அதாவது சுமார் 250 கோடி தடவை துடிக்குமாம். ஒவ்வொரு துடிப்பின் போதும், சுமார் இரண்டு அவுன்ஸ் அதாவது அறுபது மில்லி லிட்டர் ரத்தத்தை வெளியேற்றும்.

மொத்த ரத்த வகையில், மிக அரிதான ரத்தவகை எது என்றால், அது ஏ,  பி நெகட்டிவ் ரத்தவகைதான். ரத்ததானம்  செய்யும் மொத்த நபர்களில் 1 சதவீதம் பேர்தான் ஏ,  பி நெகட்டிவ் வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதே மாதிரி ஏ,  பி நெகட்டிவ் ரத்தம் தேவையும் மிகமிகக் குறைவாகவே இருக்கும்.

நமது ரத்தத்தில் சில உலோகங்களும் இருக்கின்றன. நமது ரத்தத்தில் தங்கம் மிகமிகக் குறைவான அளவில் இருக்கிறது. அதே போன்று இரும்பும் நமது ரத்தத்தில் இருக்கிறது. ஆனால் தங்கத்தைவிட இரும்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. தங்கம், இரும்பு ஆகிய இரண்டு உலோகங்கள் நமது ரத்தத்தில் இருந்தாலும், ஒரு மூக்குத்தியோ, ஒரு ஆணியோ கூட செய்யமுடியாத அளவில்தான் இருக்கிறது.

அவரவர் உள்ளங்கையை ஜந்து விரல்களையும் சேர்த்து இறுக்க மூடிக்கொண்டு பார்த்தால், எவ்வளவு பெரிதாக இருக்குமோ அவ்வளவு பெரிதுதான் ஒவ்வொருவருடைய இருதயமும் இருக்கும்.

கரென்ட் ஒயர் இல்லாத, கரென்ட் கனெக்ஷன் இல்லாத, ஷாக் அடிக்காத, ஆனால் இருதயத்தின் உள்ளேயே உள்ள, கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்சார அமைப்புதான் (பேஸ் மேக்கர்) நமது இருதயத்தின் துடிப்பை சீர்படுத்தி, தப்புத்தாளம் இல்லாமல் சரியான தாளத்தில், ஒரே சீராக எப்போதும் துடிக்கச் செய்து கொண்டிருக்கிறது.
ரத்தம் இருதயத்திலிருந்து, உடலின் மொத்த பாகங்களுக்கும் போய், மறுபடியும் இருதயத்துக்கு வர சுமார் 45 விநாடிகள் அதாவது முக்கால் நிமிடம் ஆகிறது.

வாலிப வயதுள்ள ஒருவருடைய இருதயம், ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை துடிக்கிறது.
நமது உடலிலுள்ள ரத்தம், எல்லா ரத்தக் குழாய்களின் வழியாகவும் ஒரு நாளைக்கு சுமார் 19 ஆயிரம் கி. மீ தூரம் பயணம் செய்கிறது. இந்த தூரம்,  நாம் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சாலை வழியாக 3 முறை போய் வருவதற்கு சமமாகும்.

ரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்கள், நமது உடலிலுள்ள எலும்பு மஜ்ஜையில் தான் உற்பத்தி செய்யப்பட்டு, ரத்தத்திலும்,  நிணநீர் திசுக்களிலும் சேமித்து வைக்கப்படுகிறது. இதில் சில வெள்ளை அணுக்கள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும். அதனால்தான் எலும்பு மஜ்ஜை எப்பொழுதும் வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்து கொண்டே  இருக்கிறது.

ஆப்ரிக்கா, அமெரிக்கா, பிரேசில், கொலம்பியா, மெக்ஸிகோ, பெரு, ஈகுவாடர், ஆசியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, கொரியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், ஜரோப்பா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சிலர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் ரத்தத்தை பலவித உணவு வகைகளாக தயாரித்து உண்ணுகிறார்கள். ரத்தத்தை உணவாக உட்கொள்வது என்பது ஒரு விலக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட விஷயமாக இருந்தாலும், சிலர் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள். அதிக அளவில் ரத்தத்தை உண்டால், அதுவே விஷமாகும்.

அவசர காலத்திலும், ஆபத்து நேரத்திலும், ரத்த இழப்பு அதிகமாக ஏற்பட்ட நேரத்திலும், ரத்தத்திலுள்ள பிளாஸ்மா திரவம் கிடைக்காத பட்சத்தில், பிளாஸ்மாவுக்குப் பதிலாக சுத்தமான இளநீரை கொடுக்கலாம் என்றொரு பதிவு இருக்கிறது.

கொசுக்கள் பொதுவாக எல்லோரையும் பாகுபாடு பார்க்காமல் கடித்து, ரத்தத்தை உறிஞ்சத்தான் செய்யும். ஆனாலும் கொசுக்கள் அதிகம் விரும்புவது "ஓ' ரத்தவகையைச் சேர்ந்தவர்களைத்தானாம்.

16 -ஆம் நூற்றாண்டு வரை விஞ்ஞானிகள் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது? எப்படி ஏற்படுகிறது? என்பதை கண்டுபிடிக்காமல்தான் இருத்தார்கள். 17-ஆம் நூற்றாண்டில் தான் ரத்தம் நுரையீரலிலிருந்து வெளியேற்றப்படவில்லை, இருதயத்தின் மூலம் தான் வெளியேற்றப்படுகிறது என்பதை உலகுக்குத் தெரிவித்தனர்.

மனிதர்களுக்கு மட்டும் தான் ரத்தத்தில் பல வகைகள் இருக்கின்றன என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது அப்படியல்ல; நமது செல்லப்பிராணியான நாய்களுக்குக் கூட ரத்தத்தில் ஒரு டஜன் வகைகளுக்கு மேலே இருக்கின்றது.

நாம் தானம் செய்யும் ரத்தம்,  சுமார் 42 நாள்களுக்குத் தான் வைத்துக் கொள்ளலாம். ரத்தப் பற்றாக் குறையைப் போக்க அதனால் தான் முடிந்தவரை நிறைய பேர் ரத்த தானம் செய்ய வேண்டும். 

நமது வயிற்றிலுள்ள மண்ணீரல் தான், ரத்தத்தை அவ்வப்பொழுது சுத்தம் செய்துகொண்டே இருக்கிறது.

உங்களது இருதயத் துடிப்பு நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் இசைக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் தன்மை உடையது.

விலங்குகளைப் பொருத்தவரை, மிகப் பெரிய உடலுள்ள விலங்குகளின் இருதயத்துடிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று நாம் நினைப்போம். ஆனால் அது அப்படியல்ல. இருதயத்துடிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். மிகப் பெரிய உருவம் கொண்ட நீலத் திமிங்கலத்தின் இருதயத்துடிப்பு ஒரு நிமிடத்துக்கு வெறும் ஐந்தே ஐந்து துடிப்பு தானாம். ஆனால் எலி இன வகைகளிலேயே, மிகச்சிறிய உருவம் கொண்ட  "மூஞ்சூறு' என்ற எலிக்கு ஒரு நிமிடத்துக்கு சுமார் ஆயிரம் தடவை அதன் இருதயம் துடிக்கும்.

பாதாம் பருப்புகளில் வைட்டமின் "இ' சத்தும், நல்ல கொழுப்பும் அதிக அளவில் இருக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த தினமும் பாதாம் சாப்பிடுவது நல்லது.

வாழைப்பழத்தில் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குவதில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. பீட்ரூட் காய்கறியில் "நைட்ரேட்' சத்து அதிகமாக உள்ளது. ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து ரத்தம் வேகமாக ஓட இது மிகவும் உபயோகப்படுகிறது. கேரட் காயும் அப்படித்தான். தினமும் கேரட் சாறு எடுத்து குடித்தால், சிஸ்டோலிக் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள் காய்கறிகள் ரத்த அடைப்புகள் ஏற்படாமல் செய்து, ரத்தம் சீராக ஓடுவதற்கு மிக உதவியாய் இருக்கும்.

லவங்கப்பட்டையை குறைவான அளவில் உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால், ரத்த அழுத்தம் நன்கு குறைந்து உடல் மிகமிக ஆரோக்கியமாக இருக்கும். இஞ்சியை பல வகைகளில் உணவாக பயன்படுத்தி வந்தால், ரத்தத்தில் கொழுப்பையும் ரத்தத்தில் சர்க்கரையையும் சரியான அளவில் வைத்திருக்க மிகவும் உதவியாய் இருக்கும்.

சூரியகாந்தி விதைகள் மிக முக்கியமான சத்துப்பொருட்கள் நிறைந்தது. ரத்த அழுத்தத்தை குறைப்பதில் இது மிக மிக உபயோகமாக இருக்கிறது.

"குர்கூமின்' என்ற பொருள் நிறைந்த மஞ்சள்,  உடல் முழுவதும் ரத்தம் மிக நன்றாக ஓட மிகவும் உதவியாக இருக்கும்.

பாதாம் பிஸ்தா வகையைச் சேர்ந்த "அக்ரூட்' பருப்பு (வால்நட்) ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்ததாகும். இது ரத்த ஓட்டத்துக்கு மிகவும் உபயோகமான ஒரு உணவுப் பொருளாகும்.

வெண்ணெய்ப் பழம், பெர்ரி, சாக்லெட், மீன், க்ரீன் டீ, மாதுளம்பழம், சின்ன வெங்காயம், தக்காளி, தர்பூசணி போன்ற உணவு வகைகள் இருதயத்தையும் ரத்தக்குழாய்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க ஏதாவதொரு வகையில் உதவி செய்கின்றன.

சிவப்பு மிளகாய் விதைகள் பீட்ரூட் காய், பூண்டு, கருப்பு திராட்சை, கீரைகள் முதலியவைகளை அவ்வப்பொழுது உணவுகளில் சேர்த்துக் கொண்டால் ரத்தமும், ரத்த ஓட்டமும் ஆரோக்கியமாக இருக்கும்.

தொடரும்..   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com