மேலை நாடுகளைப் போல இங்கேயும் சுதந்திரப்பாடல்கள், ஆல்பங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ஹாலிவுட் திரையுலகில் திரை நுழைவிற்கான ஒரு முன்னோட்டமாக குறும்படங்களும் ஆல்பங்களும் இருப்பது போல் இங்கேயும் அந்தப் போக்கு தொடங்கியுள்ளது.
அந்த வகையில் தனது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக பிரகலாத் ராகவேந்திரன் இசையமைத்துள்ள தனிப் பாடல்தான் "காற்றிலே'. ஒரு பாடகராக இவர் பல இசையமைப்பாளர்களிடம் பாடியிருக்கிறார்.இப்போது பாடகரிலிருந்து இசையமைப்பாளராக மாறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் குறும்படங்கள், வெப் சீரிஸ், விளம்பரங்கள் போன்றவற்றிற்கு இசையமைத்து வருகிறார். அவரது "காற்றிலே' தனிப்பாடலை முகுந்தன் ராமன் எழுதியிருக்கிறார். பிரதீப் குமார் பாடி இருக்கிறார். மியூசிக் மேஜிக் நிறுவன ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் இவரது இசையில் உன்னிகிருஷ்ணன் "கலர் கனவே' என்ற பாடல் பாடிவெளியாகி இருக்கிறது.
உன்னி கிருஷ்ணன் தன் மகள் உத்ராவுடன் அப்பா மகள் பாசத்தைப் பற்றிய பாடலான "என் மகளே‘ என்கிற பாடலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்து பாடல்கள் வெளிவர உள்ளன. காற்றிலே தனிப்பாடலை பாடகர் உன்னிகிருஷ்ணனும், நடிகை சொர்ணமால்யாவும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.