பாதை மாறிப்போகும்!

கல்வித் துறையின் நோக்கம் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி வழங்குவது; சுகாதாரத் துறையின் நோக்கம், தரமான மருத்துவ வசதிகளை அனைவருக்கும் வழங்குவது; வனத்துறையின் நோக்கம் வனங்களைப் பாதுகாப்பது.
பாதை மாறிப்போகும்!

கல்வித் துறையின் நோக்கம் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி வழங்குவது; சுகாதாரத் துறையின் நோக்கம், தரமான மருத்துவ வசதிகளை அனைவருக்கும் வழங்குவது; வனத்துறையின் நோக்கம் வனங்களைப் பாதுகாப்பது. அப்படி இருக்கையில் மதுவுக்கு அடிமையானவரை பாதுகாப்பது குறித்தும், அதன் பின் அந்த குடும்பம் என்ன ஆகிறது...? கேள்விகளால் நிறைத்து கொண்டே இருக்கிறார் அறிமுக இயக்குநர் மாணிக்க வித்யா. "தண்ணி வண்டி' படத்தின் மூலம் கோடம்பாக்கம் வருகிறார்.

குடி குடியை கெடுக்கும்... இதுதான் கதையின் உள்ளடக்கமா...

சாராயம்தான் போதை என்று பல பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பணம், காதல், புகழ், படைப்பு, அதிகாரம், ஆன்மிகம் என ஒவ்வொன்றும் போதைதான். போதையை மாற்றிப் போட்டால், பாதையே மாறிப்போகும். உன் போதையை சாராயத்துல இல்லை... நல்ல விஷயத்துல போடு. இதுதான் இந்தப் படத்தின் லைன்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு விஷயத்திற்கு அடிமையாக இருப்பார்கள். அப்படி போதைக்கு அடிமையான 8 கதாபாத்திரங்களின் வாழ்க்கை தான் இந்த படத்தின் திரைக்கதை. மனிதன் அவன் நினைப்பதை காட்டிலும் அதிக ஒழுக்கமுடையவன்., ஆனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு ஒழுக்கங்கெட்டவன் என்ற " சிக்மண்ட் ப்ராய்ட் " ன் வாசகம் தான் படம். மதுரை சிட்டியில் தண்ணிவண்டி வைத்து பிழைப்பு நடத்தும் உமாபதி ராமைய்யா, பாலசரவணன், சம்ஸ்கிருதி மூவரும் ஒரு முக்கிய புள்ளியின் கொலை வழக்கில் மாட்டிக் கொள்கிறார்கள் முக்கிய புள்ளியின் ஆட்கள் ஒருபுறம் தேட, காவல்துறை ஒருபுறம் தேட, இறுதியில் தப்பித்தார்களா தங்களை குற்றமற்றவர்கள் என எப்படி நிரூபித்தார்கள் என்பது கதையின் நகர்வாக இருக்கும்.

எப்படி இருக்கும் படத்தின் திரை வடிவம்....

இந்தப் படத்துக்காக ஒரு காட்சி, ஒரு வசனத்தைக்கூட எங்கேயும் யாருடனும் விவாதிக்கவில்லை. எல்லாமே எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், நம் உள்ளங்கை உணர்ந்த கண்ணீர், கண் கூடாக பார்த்த அம்சங்கள்...இது உண்மைக்கு நெருக்கமெல்லாம் இல்லை... இது உண்மையேதான். "ஒரு சினிமா, இரண்டரை மணி நேரம்தான். ஆனா, ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம்.' வாழ்க்கைதான் நாம யோசிக்கவே முடியாத சினிமா என்பது டிஸிகாவின் கோட். இது எவ்வளவு உண்மை. நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற எளிய மனிதனின் வாழ்க்கைதான் இது. கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தப் படம். எங்கோ கோடி பேரில் ஒருவனுக்கு நடக்கிற கதை இல்லை. இது எல்லோருக்குமானது. உங்களை விட, என்னை விட எல்லோரும் சந்திக்கப் போகிற பிரச்னை. இந்தக் கோரத்தின் பிடியில் யாரும் சிக்கிக் கொள்ளலாம்... அதற்கான விழிப்புணர்வு இது.

விமர்சிக்கிற விதமாகத்தான் இந்த மாதிரியான கதைகளை சொல்ல முடியும்....

ஆமாம், கண்டிப்பாக விமர்சனம் இருக்கிறது. "இரண்டு படி லட்சியம். ஒரு படி நிச்சயம்' என அண்ணா சொன்னார். அவர் சொன்னது அரிசிக்கு. ஆனால் இன்றைக்கு, "வீட்டுக்கு இரண்டு குடிகாரர் லட்சியம்; ஒருவர் நிச்சயம்' எனக் கோட்பாடு வகுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் மிகக் கடுமையாக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊர்களில் கூட விடாப்பிடியாக மதுக்கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மதுரை பக்கம் வைகை ஆற்றின் தரைப் பாலத்துக்கு போனால், ஆற்றுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவர... எங்கும் குளுமையும் பசுமையும் நிறைந்திருக்கின்றன. சுற்றியுள்ள விவசாயக் கிராமங்களுக்கு இந்த இடம்தான் ஒன்று கூடும் இடம். மாலை நேரமாகிவிட்டால் ஆற்றுப்பாலம் எங்கும் கூட்டம் மொய்க்கும். மொத்தம் மூன்று டாஸ்மாக் கடைகள். முழுக்க முழுக்க விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் நிறைந்த பகுதி என்பதால், மூன்று கடைகளிலும் கூட்டம் அதிகம். ஆற்றில் தண்ணீர் வந்தாலும் வராவிட்டாலும் டாஸ்மாக் தண்ணீருக்கு மட்டும் எந்தத் தடையும் இல்லை. ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்றால், குடிகாரர்களுக்கு அதுதான் திறந்தவெளி பார். ஆற்று மணலில் அமர்ந்து ஏகாந்தமாகக் குடிப்பார்கள். இப்படியான நிலைக்கு யார் காரணம். இதைச் சொல்லாமல் சினிமா ஒதுங்குவது சரியாக இருக்குமா....

நடிகர்களின் பங்களிப்பு எப்படி கை வந்து சேர்ந்திருக்கிறது...

தம்பி ராமையாவின் மகன் உமாபதி இதில் ஹீரோ. தம்பி ராமையா அவருக்கு அப்பாவாகவே இதிலும் வருகிறார். உமாபதிக்கு பெரும் சினிமா தாகம் உண்டு. அவர் பொருந்தி வந்து நடித்திருக்கிறார். அன்பின் பிரிவில் தவித்து, குடியின் கோரத்தில் சிக்கி கொண்டு திணறும் இடங்களில் அவ்வளவு அற்புதமாக பொருந்தியிருக்கிறார். சம்ஸ்கிருதி, பால சரவணன், ஜார்ஜ், நரேன் இப்படி கதைக்கு பொருத்தமான முகங்கள்.தேவதர்ஷினி, மதுரை முத்து, முல்லை கோதண்டம், சேரன்ராஜ், மனோஜ்குமார், பாவாலட்சுமணன், சுகுமார், மூர்த்தி இப்படி இன்னப் பிற இடங்களை இவர்களெல்லாம் நிறைத்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com