சென்னையைச் சேர்ந்தவர் ஸ்டனிஷ்லாஸ். 90 வயதிலும் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
முனைவர் பட்டம் பெற்ற அனுபவம் குறித்து கேட்ட போது சொன்னார்:
""என்னுடைய சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள சிறுகிராமம். பள்ளிப் படிப்பை முடித்த நான் சர்வேயர் பயிற்சி பெற்றேன். அரசு நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று சர்வேயராகப் பணியாற்றினேன். தொடர்ந்து மும்பையில் பணியாற்றினேன். 1953- ஆம் ஆண்டு பாதுகாப்பு துறையின் பொறியாளராகப் பணியில் சேர்ந்தேன். 1989-ஆம் ஆண்டுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.
என்னுடைய சிறுவயதிலேயே அப்பா, அம்மாவை இழந்துவிட்டேன். அதனால் எப்போதுமே படிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் விரும்பியதைப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி 2005-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ சமூகவியல் பட்டம் பெற்றேன். 2008-ஆம் ஆண்டு திருப்பதி வெங்டேஸ்ரா பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி முழு நேர வகுப்பில் சேர்ந்து சட்டம் படித்தேன்.
2011-ஆம் ஆண்டு வழக்குரைஞராக சென்னை பார் கவுன்சிலில் பதிவு செய்தேன். 9 ஆண்டுகளில் என்னால் முடிந்த வரை பிறருக்கு சட்ட உதவிகள் செய்து வருகிறேன். 2014-ஆம் ஆண்டு எம்.ஏ சட்டப்படிப்பை ஆச்சார்யா நாகர்ஜுனா பல்கலைக்கழகத்தில் முடித்தேன்.
2020 சட்டப்படிப்பில் பி.ஹெச்.டி 3 ஆண்டு 2 மாதம் 10 நாள்களில் முடித்தேன். 20 நபர்கள் என்னுடன் தேர்வு எழுதினார். அதில் முதல் நபராக முனைவர் பட்டம் பெற்றேன். 90 வயதில் இது சாதனையாகும்'' என்கிறார் ஸ்டனிஷ்லாஸ்