லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரித்து வரும் படம் "நினைவெல்லாம் நீயடா' . "சிலந்தி', "அருவா', "சண்ட' ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை எழுதி இயக்குகிறார். பிரஜன், சினாமிகா, கேப்ரில்லா, மனோபாலா, காளி வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இயக்குநர் ஆதிராஜன் பேசும் போது... """இந்திய திரையிசையின் அடையாளமாகத் திகழும் இளையராஜாவின் இசையில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இந்த வாய்ப்பு என் தவத்திற்கு கிடைத்த வரம்.
ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் மண்ணுக்குள் போகும் வரை மறக்க முடியாதது... முதல் காதல். அதுவும் மீசை அரும்பும் முன்பே ஆசை அரும்பும் பள்ளிக்கூட காதல் நினைக்கும் போதெல்லாம் சிலிர்க்கவைக்கும். முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காதலர்களை பற்றிய இளமை துள்ளும் கதை இது. காதலைக் கொண்டாடிய " அழகி' "ஆட்டோகிராப்', " பள்ளிக்கூடம்' , " 96' பட வரிசையில் இந்தப்படமும் நிலைத்து நிற்கும். இந்த படத்தின் பாடல் பதிவு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது'' என்றார் இயக்குநர்.