ரத்தத்தின் ரத்தமே... - 15

ஆறுகளில் தண்ணீர் எப்பொழுதும் ஒரே சீராக ஓடும்போது, ஆற்றின் கரைகளுக்கு வேலையே இல்லை.
ரத்தத்தின் ரத்தமே... - 15

ஆறுகளில் தண்ணீர் எப்பொழுதும் ஒரே சீராக ஓடும்போது, ஆற்றின் கரைகளுக்கு வேலையே இல்லை. அதே நேரம், ஆறுகளில் தண்ணீர் ஒரே சீராக இல்லாமல், தன் இஷ்டத்துக்கு வேகமாக ஓடும்போது, ஆற்றின் கரைகளுக்குத் தான் அதிகப் பிரச்னை. அதிக வேலையும் கூட. ஆற்றில் வரும் தண்ணீரின் வேகம் முழுவதும் கரைகள் மீது தான் காட்டப்படுமே தவிர, ஆற்றின் நடுவிலும் சரி, தண்ணீரிலும் சரி எதுவுமே ஏற்படாது.
அதேபோலத்தான், நமது உடலில் எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம், ஒரே சீராக ஓடிக்கொண்டிருந்தால், உடலுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. ஆனால் ரத்தம் திடீரென்று வேகமாக ஓடும்போது, ஆற்றின் கரை போன்ற ரத்தக் குழாய்களுக்குத் தான் அதிகப் பிரச்னை. அதிக வேலை. அதிகப் பாதிப்பும் கூட. இம்மாதிரி நேரத்தில் தான் உடலிலுள்ள ரத்த அழுத்தத்தின் அளவு கூடுகிறது. சிலருக்கு ரத்த அழுத்தத்தின் அளவு குறைகிறது.
உலகிலுள்ள மொத்த ஜனத்தொகையில், மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு அதிக ரத்த அழுத்தம்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்த ஒரு பங்கு மக்கள் தங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது என்பது தெரியாமலேயே, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். "எனக்கு ரத்த அழுத்தம் இருக்கிறதா? எனக்கு பிரஷர் இருக்குதா? செக் பண்ணுங்க டாக்டர்' என்று அநேகம் பேர் அதிக ரத்த அழுத்தத்தை இப்படித்தான் சொல்வார்கள்.
ரத்த அழுத்தம் மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே இருக்கத்தான் செய்யும். இது இயற்கை. மனிதனுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் கூட ரத்த அழுத்தம் உண்டு. செல்லப் பிராணியான நாய்க்கு சுமார் 110/60 மி.மீ அளவும் குதிரைக்கு சுமார் 112/70 மி.மீ அளவும் யானைக்கு சுமார் 178/118 மி.மீ அளவும் ரத்த அழுத்தம் இருக்கும். விலங்குகளிலேயே ஒட்டகச் சிவிங்கிக்கு மட்டும் தான் மிக அதிக ரத்த அழுத்தம் இருக்கும். ஒட்டகச் சிவிங்கிக்கு சுமார் 300/180 மி.மீ அளவு ரத்த அழுத்தம் இருக்கும். இது மனிதர்களுக்கு இருக்கும் ரத்த அழுத்தத்தின் அளவு போன்று இரண்டு மடங்குக்கு மேலேயாகும்.
ஒட்டகச் சிவிங்கிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கக் காரணம் அதன் உடலமைப்புதான். ஒட்டகச் சிவிங்கியின் உடலிலிருந்து (அதாவது இருதயத்திலிருந்து மிக நீளமாகவுள்ள கழுத்தின் மேற்பகுதியில் தான் தலையும் உள்ளே மூளையும் இருக்கிறது). இருதயத்திலிருந்து சுமார் 3 மீட்டர் உயரத்திலுள்ள மூளைக்கு ரத்தத்தை அனுப்ப அதிக அழுத்தம் தேவைப்படுகிறது. அதனால்தான் ஒட்டகச் சிவிங்கியின் ரத்த அழுத்தம் மற்ற எல்லா விலங்குகளையும் விட அதிகமாக இருக்கிறது.
உங்களுடைய உடலின் ரத்த அழுத்தம் ஒருநாள் முழுக்க, ஒரே மாதிரி ஒரே அளவில் எப்பொழுதும் இருக்காது. சில நேரம் குறையும். சில நேரம் கூடும். இப்படிப்பட்ட நேரங்களில் உங்களது உடல் இயற்கையாகவே செயல்பட்டு ரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைக்க முயற்சி செய்து அதை சரி செய்தும் விடுகிறது. இயற்கையே ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதனால் தான் நமது உடல் அனைத்துக்கும் குறிப்பாக மூளை இருதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனும் ரத்தமும் ஒழுங்காகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
திடீரென்று நீங்கள் எழுந்து நின்றால் உங்களது ரத்த அழுத்தம் சட்டென்று கூடும். ஆனால் சில நிமிடங்களிலேயே அது தானாகவே சரியாகிவிடும். இதேபோல், தூங்கும்போதும், ஓய்வாக அமர்ந்திருக்கும் போதும் உங்களது ரத்த அழுத்தம் சற்று குறைவாகவே இருக்கும். இது இயற்கையே. பயப்படத் தேவையில்லை.
"அவன் என்னைத் திட்டிவிட்டான், என் ரத்தம் கொதிக்குது' என்று சிலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம்."ரத்தக் கொதிப்பு' என்றும் இதை அழைப்பார்கள். இந்த ரத்தக் கொதிப்பு என்பது ரத்தம் சூடேறி கொதித்து விடுவதெல்லாம் கிடையாது. அதிக கோபத்தில் அதிக ஆத்திரத்தில் ரத்த அழுத்தம் அதிகம் ஆகிவிடுவதையே ரத்தக் கொதிப்பு என்கிறார்கள்.
"அவள் வீட்டில் வேலை செய்து கொண்டே இருப்பாள். அடிக்கடி திடீரென்று மயக்கம் போட்டு விழுந்துவிடுவாள். அவளுக்கு "லோ பிபி' அதாவது குறைந்த ரத்த அழுத்தம் என்று சிலர் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். பொதுமக்களின் பாஷையில் ரத்தக் கொதிப்பு என்றால் அதிக ரத்த அழுத்தம் என்று அர்த்தம். "லோ பிபி' என்றால் குறைந்த ரத்த அழுத்தம் என்று அர்த்தம்.ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறதா அல்லது குறைவாக இருக்கிறதா? என்பதை அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் மற்றும் சில அறிகுறிகளை வைத்தும் கண்டுபிடித்துவிடலாம்.
திடீரென்று தலைகனமாக இருக்கின்றதா? தலை சுற்றல் இருக்கின்றதா? எழுந்து நேராக நிற்க முடியவில்லையா? நடக்க முடியவில்லையா? வாந்தி வருகிற மாதிரி இருக்கிறதா? மூக்கில் ரத்தம் சொட்டுச் சொட்டாகவோ அல்லது அதிகமாகவோ வடிகிறதா? பார்வை மங்கலாகத் தெரிகிறதா? கண் இருண்டு போன மாதிரி இருக்கிறதா? நெஞ்சுப் பகுதியில் லேசான வலி இருக்கிறதா? மார்புப் பகுதி இறுக்கமாக இருக்கிறதா? மூச்சுவிடச் சிரமமாக இருக்கிறதா? சிறுநீரில் ரத்தம் கலந்து சிறுநீர் சிகப்பு நிறத்தில் வருகிறதா? இருதயத் துடிப்பு சீராக இல்லாமல் இஷ்டத்துக்குத் துடிக்கிறதா? உடம்பெல்லாம் அடித்துப் போட்ட மாதிரி இருக்கிறதா? குப்பென்று வியர்த்துக் கொட்டுகிறதா? ஒரே குழப்பமாக இருக்கிறதா? கண்கள் சிவந்து போயிருக்கிறதா? கன்னங்கள் சிகப்பாகத் தெரிகிறதா? தூக்கம் வரமாட்டேங்குதா? மேற்கூறிய அறிகுறிகளில் ஏதாவது 2 அல்லது 3 இருந்தால் கூட உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறதென்று அர்த்தம். இதைப் படித்து முடித்தபின் உங்களுக்கு இப்பொழுதே தலை சுற்ற ஆரம்பித்து ரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பித்துவிடும்.
அநேக மக்களுக்கு அதிக ரத்த அழுத்தம் ஆரம்பக் கட்டத்தில் தெரியவே தெரியாது. கண்டுபிடிக்கவும் முடியாது. உடலில் எந்தவித அறிகுறியையும் காட்டவும் செய்யாது. ரொம்ப அதிகமாகப் போன பிறகுதான் அறிகுறிகளைக் காட்டும். அப்பொழுதுதான் மக்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி வருவார்கள்.
நாற்பது வயதை நெருங்கியவர்கள் ரத்த அழுத்தத்துக்காக மருந்து மாத்திரை சாப்பிடாதவர்கள் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை உங்களது ரத்த அழுத்த அளவை டாக்டரிடம் சென்று சரிபார்த்துக் கொள்வது நல்லது. நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் ரத்த அழுத்தத்துக்காக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் மாதத்துக்கு ஒரு முறை உங்களது ரத்த அழுத்த அளவை சரி பார்த்துக் கொள்வது நல்லது. இருதய நோய் சர்க்கரை நோய் ரத்த அழுத்த நோய் உள்ள வயதானவர்கள் மாதத்துக்கு இருமுறை ரத்த அழுத்த அளவை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
"எனக்குத்தான் தாங்க முடியாத தலைவலி வரலையே எனக்குத்தான் மூக்கில் ரத்தம் வரலையே அதனால் எனக்கு அதிக ரத்த அழுத்தம் இல்லை' என்று நீங்களாகவே முடிவு செய்து வீட்டில் உட்கார்ந்திருக்காதீர்கள். உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறதென்று தோன்றினால் எதைப்பற்றியும் யோசிக்காமல் பயப்படாமல் 5 நிமிடம் அமைதியாக உட்கார்ந்திருங்கள். பின் 5 நிமிடங்கள் கழித்து மறுபடியும் பரிசோதித்துப் பாருங்கள். கண்டிப்பாகக் குறைந்திருக்கும்.

அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க ...

1. முதல் எதிரியான உணவிலுள்ள உப்பைக் குறையுங்கள்.
2.தேவையான அளவு பொட்டாசியம் சத்துள்ள உணவுப்பொருள்களை சேர்த்துக் கொள்ளுங்கள். (வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரை வகைகள், பயறு வகைகளில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது)
3.எல்லாச் சத்துக்களும் நிறைந்த சரிவிகித சத்துணவுகளை அதிகமாக உண்ணுங்கள்.
4. உடல் எடையை குறையுங்கள்.
5.உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
6.மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் நிறுத்த முயற்சி செய்யுங்கள். மது அருந்தினால்தான் ரத்த அழுத்தம் குறைகிறது என்று சொல்லாதீர்கள்.
7.சிகரெட்டை அறவே நிறுத்திவிடுங்கள்.
8துரித உணவுகள் ரோட்டோரக் கடை உணவுகள் புதிய உணவு வகைகள் முதலியவைகளை சாப்பிடாதீர்கள்.
9.பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள் டப்பாவில் அடைக்கப்பட்ட பெரும்பாலான உணவுப் பொருட்கள் ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும். தொடாதீர்கள்.
மேற்கூறிய விஷயங்கள் எல்லாம் அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி செய்யக் கூடியவைகள்தான். ஆனால் இவையெல்லாவற்றையும் விட, உங்கள் மனசு, உங்கள் எண்ணம், உங்கள் வாழ்க்கை நடைமுறைதான் உங்களது ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் முக்கிய காரணங்களாகும். மனதுக்கு நிம்மதி கொடுக்கும் நல்ல விஷயங்களைத் தேடிச் செய்யுங்கள். அதிக ரத்த அழுத்தம் வரவே வராது.

குறைவான ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதைச் சரி செய்ய....

1. நிறையத் தண்ணீர் குடியுங்கள். உடலில் நீர்ச்சத்துக் குறைந்துவிட்டாலும் ரத்த அழுத்தம் குறையும்.
2. மது அருந்துவதை நிறுத்துங்கள்.
3. கொஞ்சம் உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. இறுக்கமான காலுறைகளை உபயோகப்படுத்துங்கள்.
5. தைராய்டு பரிசோதனை அடிக்கடி செய்து அளவோடு வைத்துக் கொள்ளுங்கள்.

எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும். ரத்த அழுத்தமும் அமைதியாகவும் அளவாகவும் இருக்கும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com