ரத்தத்தின் ரத்தமே...- 16

ரத்தக்கசிவு, ரத்தப்போக்கு, ரத்த வாந்தி, ரத்தம் ஒழுகுதல், ரத்தம் வடிதல், ரத்தம் வழிதல்-இப்படி உடலின் உள்ளேயிருந்து வெளிவரும் ரத்தத்தை, பலர் பலவிதமாக அழைப்பார்கள்.
ரத்தத்தின் ரத்தமே...- 16


ரத்தக்கசிவு, ரத்தப்போக்கு, ரத்த வாந்தி, ரத்தம் ஒழுகுதல், ரத்தம் வடிதல், ரத்தம் வழிதல்-இப்படி உடலின் உள்ளேயிருந்து வெளிவரும் ரத்தத்தை, பலர் பலவிதமாக அழைப்பார்கள்.

தலை முதல் கால்வரை உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் ரத்தக் கசிவு ஏற்படலாம். அதே போன்று உடலின் வெளியேயும் ரத்தக் கசிவு ஏற்படலாம். உடலுக்கு உள்ளேயும் ரத்தக் கசிவு ஏற்படலாம். உடலின் வெளியே ஏற்படும் ரத்தக் கசிவு நமது கண்ணுக்குத் தெரியும்;  நாமே பார்ப்போம். ஆனால் உடலுக்கு உள்ளேயே எற்படும் ரத்தக் கசிவை நம் கண்ணால் பார்க்க முடியாது.

ரத்தம் உடலிலிருந்து வெளியே வருவதை வெளிரத்தக் கசிவு என்று சொல்லலாம். உடலுக்கு உள்ளேயே ரத்தம் கசிவதை உள் ரத்தக் கசிவு என்று சொல்லலாம். உடலிலிருந்து ரத்தம் வெளியே வர பல வழிகள் உள்ளன. உடல் முழுவதும் 2 சதுர மீட்டர் தோலால் நன்கு மூடப்பட்டுத் தானே இருக்கிறது  அப்புறம் எப்படி ரத்தம் உடலிலிருந்து வெளியே வரும்? என்ற பயம் எல்லோருக்கும் உடனே வந்திருக்கும். 

முகமது பின் துக்ளக் என்றொரு பழைய தமிழ்த் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய "அல்லாஹ் அல்லாஹ்', என்று தொடங்கும் பாடலில் உடலுக்கு ஒன்பது வாசல் மனதுக்கு எண்பது வாசல் என்று சொல்லியிருப்பார் (கண் (2) காது (2) மூக்கு (2) வாய் (1) ஆசன வாய் (1) சிறுநீர்ப்பாதை (1) ) "நமது உடல் முழுவதும் மூடப்பட்டிருக்கும் தோலில் நமது தேவைக்காக இயற்கையாக ஏற்பட்ட இடைவெளிகள் தான் இந்த ஒன்பது வாசல்' என்று கவிஞர் வாலி மிக அழகாக சொல்லியிருக்கிறார். 

வெட்டு, குத்து, அடிதடி போன்ற நிகழ்வுகளில் கீறல், சிறாய்ப்பு, தேய்த்தல் முதலியவைகள் ஏற்பட்டு அதன் மூலம் ரத்தக் கசிவு ஏற்படுவது வெளி ரத்தக் கசிவு ஆகும். விபத்தினால் உடலின் உள்ளேயிருக்கும் உறுப்புகள் மற்றும் சிறிய பெரிய ரத்தக் குழாய்கள் சேதமடைந்து அதன் மூலம் ரத்தக் கசிவு ஏற்படுவது உள் ரத்தக் கசிவு ஆகும்.

எல்லாக் காயங்களுமே சிறிய அளவிலாவது ரத்தக் கசிவை ஏற்படுத்தும். அப்படி ரத்தக் கசிவு தோலில் ஏற்படவில்லையென்றால் ஒன்று அது ஊமைக் காயமாக இருக்கலாம். அல்லது காயம் பெரிதாக படாமல் மேல் தோலிலேயே கூட லேசாக உரசி விட்டுச் சென்றிருக்கலாம். மனித தோலின் சராசரி தடிமன் அளவு சுமார் 2 மில்லிமீட்டர் தான். இவ்வளவு மெல்லிய தோல் லேசான உரசலில் கூட பிய்ந்துவிடும். எனவே லேசான விபத்தில் கூட தோலிலிருந்து ரத்தம் வெளிவருவது என்பது மிகமிகச் சுலபம்.

விபத்தின்போது வெளிவரும் ரத்தம் அதனுடைய ஆழத்தைப் பொறுத்து மாறுபடும். லேசான விபத்து என்றால், (அதாவது விழுந்து புரண்டு எழுந்து விடுவது) உடலின் ஏதாவதொரு இடத்தில் மேல்தோல் மட்டும், மெல்லியதாக, சீவி எடுத்தாற்போன்று ஏற்பட்டிருக்கும். இந்த மாதிரி விபத்துகளில் மேல் தோலோடு காயம் சரி. நடுத்தோல் மற்றும் உள் தோலுக்குக் காயம் போகாது. அதனால் ரத்தக் கசிவும் மிக மிகக் குறைவாகவே இருக்கும்.

உடலின் வெளிப்பக்கத்தைப் பொருத்தவரை சில நோய்களில் கண்களிலிருந்து கூட ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புண்டு. சில நோய்களில் காதுகளிலிருந்து ரத்தக் கசிவும் ஏற்பட வாய்ப்புண்டு. மிக வெப்பமான மிக உலர்ந்த காற்றுள்ள காற்றின் ஈரப்பதம் மிகக் குறைந்த காலநிலைகளில் மூக்கிலிருந்து ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புண்டு. சைனஸ் நோய் அதிக ரத்த அழுத்தம் போன்றவைகளினாலும் மூக்கிலிருந்து ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புண்டு.

வாய் வழியாக ரத்தம் வெளியேறுவதை நாம் "ரத்த வாந்தி' என்றழைப்பதுண்டு. அதாவது வயிற்றின் உள்ளே இருக்கும் பொருள்களை மீண்டும் வாய் வழியாக வெளியே கொண்டு வருவது. அது வெறும் ரத்தமாகவும் இருக்கலாம். அல்லது உணவு கலந்த ரத்தமாகவும் இருக்கலாம். ரத்த வாந்தி எடுத்தாலே அந்த நபர் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய நபர் ஆவார். சில நேரங்களில் மிக அரிதாக மிகச் சாதாரண விஷயத்துக்குக் கூட ரத்த வாந்தி ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் மூக்கின் உள்பகுதியில் அடிபட்டாலோ வாயின் உள்பகுதியில் அடிபட்டாலோ அந்த இடத்தில் வடியும் ரத்தமானது வயிற்றுக்குள் போய் பின் மறுபடியும் வாய் வழியாக ரத்த வாந்தியாக வருவதுண்டு.

வாய் வழியாக வரும் ரத்த வாந்தி சிவப்பு, கருஞ்சிவப்பு பழுப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் இருக்கும். பழுப்பு நிறத்தில் வரும் ரத்த வாந்தி அநேகமாக காபி கலரில் இருக்கும். ரத்த வாந்தியின் நிறத்தை வைத்தே ரத்தம் உடலுக்குள் எங்கிருந்து வருகிறது எதனால் வருகிறது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.

கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுத்தால் ரத்தம் பெரும்பாலும் இரைப்பை மற்றும் அதனை ஒட்டிய உணவு மண்டலத்தின் மேற்பகுதியிலிருந்து வருகிறது என்று அர்த்தம். பளிச் சென்ற சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுத்தால் அந்த ரத்தமானது அப்பொழுதுதான் இரைப்பைக்குள் கசிந்திருக்கிறது என்று அர்த்தம்.

கருஞ்சிவப்பு நிறத்தில் வாந்தி வருகிறதென்றால் உடலின் உள்ளே ரத்தம் மெதுவாக கசிகிறது என்று அர்த்தம்.ஒரே நேரத்தில் சிலர் சுமார் அரை லிட்டர் ரத்தம் கூட வாந்தியாக எடுப்பார்கள். இது போன்ற நபர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று முதலுதவி செய்ய வேண்டும்.

திடீரென்று வெறும் வாந்தி வந்தாலே தெருவையே கூட்டிவிடும் நாம் ரத்த வாந்தி வந்தால் அவ்வளவுதான்‚ ஊரையே கூட்டிவிடுவோம். ரத்தவாந்திக்கு அவ்வளவு பலம். ரத்த வாந்திக்கு பல காரணங்கள் இருக்கின்றன. விபத்தினாலோ காயத்தினாலோ தீராத நாள்பட்ட நோயினாலோ மருந்து மாத்திரைகள் ஒத்துக் கொள்ளாததினாலோ அதிக அளவில் உள்ள வயிற்றுப் புண்ணினாலோ ரத்த வாந்தி ஏற்பட வாய்ப்புண்டு. ஒன்றும் செய்யாது என்று முடிவு பண்ணி வெறும் வயிற்றில் சில மாத்திரைகளை சில பேர் போட்டுக் கொள்வதுண்டு.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் "ஆஸ்பிரின்' என்றொரு மாத்திரையை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் வயிற்றில் ஓட்டை போட்டுவிடக் கூடிய அளவுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிடும். அதனால் வெறும் வயிற்றில்  மாத்திரைகளைப் போடாதீர்கள் என்று மருத்துவர்கள் அறிவுரை சொல்வதுண்டு. அறிவுரையை கேட்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். கேட்காதவர்கள் மாட்டிக் கொள்வார்கள்.

உணவுக்குழாய் எரிச்சல் மூக்கின் உள்பகுதியில் ரத்தம் வடிதல், நெஞ்சுப் பகுதியிலுள்ள உணவுக்குழாய் சிதைந்து போகுதல், சாப்பிடமுடியாத  உணவுப்பொருளை விழுங்கி, அதனால் உணவுக் குழாயில் ஏற்படும் சிதைவு, குழந்தைகள், தெரியாமல் சில பொருள்களை விழுங்கி அதனால் உணவுக்குழாய் பாதிப்படைதல்,  இது போன்ற சில காரணங்களும் ரத்த வாந்தியை உண்டாக்கும். இதோடு மட்டுமல்லாமல் இரைப்பைப் புண், இரைப்பை, புற்றுநோய், கணையப் புற்றுநோய், மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவுகள் ஆகியவைகளும் ரத்த வாந்தியை உண்டுபண்ணும்.

"ரத்த வாந்தி' என்பது ஒவ்வொருவருடைய ஆயுளிலும் ஒரே ஒரு தடவையாவது வர வாய்ப்புண்டு. ஆயுள் முழுக்க ரத்த வாந்தி வராமலே வாழ்நாளை ஓட்டியவர்களும் உண்டு. ஆண்டுக்கொரு முறை ரத்த வாந்தி எடுப்பவர்களும் உண்டு.

"ரத்த வாந்தி' எடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு விஷயம்-ரத்தம் வாய் வழியாக வெளியே வருவதோடு மட்டுமல்லாமல் மூக்கு வழியாகவும் வரும். அப்படி வரும்போது திடீரென்று தொண்டையிலிருந்து நுரையீரலுக்குள் சென்றுவிடும். இதுதான் ரொம்ப ரொம்ப அபாயமான விஷயமாகும். உடனடியாக இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரிழப்பு கூட ஏற்படலாம். பெரும்பாலும் 1.விழுங்க முடியாமல் தொண்டையில் பிரச்னை உள்ளவர்கள் 2.மது அருந்துபவர்கள் 3.பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 4.வயதானவர்கள்-இவர்களுக்குத்தான் மேற்கூறிய மாதிரி பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு.

உடலிலிருந்து வெளியாகும் ரத்தக் கசிவுகளிலேயே மிக முக்கியமானது பெண்களுக்கு மாதவிலக்கு நாள்களில் ஏற்படும் ரத்தக் கசிவு தான். "மங்கையராய் பிறப்பதற்கே  மாதவம் செய்திட வேண்டுமம்மா', என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சொன்னதுபோன்று பெண்களாய்ப் பிறக்க கோடி கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். பெண்கள் தங்கள் வாழ்நாளில் பெரும்பாலான காலங்கள் இந்த மாதாமாத பிரச்னையில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இது இயற்கையே என்றாலும் படும் கஷ்டம் ஏராளம். பெண்கள் தங்களது பாஷையில் இதை ரத்தக் கசிவு என்று சொல்லாமல் "ரத்தப் போக்கு' என்று சொல்வார்கள். உடலிலிருந்து வெளியாகும் ரத்தப் பிரச்னைகளில் இதுவும் ஒன்று.

கர்ப்பமாக இருக்கும்போது ஏற்படும் ரத்தக் கசிவு, கர்ப்பப்பை புற்றுநோயினால் ஏற்படும் ரத்தக் கசிவு, பைப்ராய்டு கர்ப்பப்பை கட்டியினால் ஏற்படும் ரத்தக்கசிவு, ஆசன வாயில் மூல நோயினால் ரத்தக் கசிவு, நோயினால் பெண்ணுறுப்பு வழியாக ரத்தக் கசிவு, போன்ற பல காரணங்களில் உடலிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படுவதுண்டு.

பல் ஈறுகளில் கெட்ட ரத்தம் சேர்ந்து போய் கசிவது, ஆண்களின் சிறுநீர்ப்பாதையில் கல் உண்டாகி, கீழே இறங்கும் போது சிறுநீர்ப்பாதையை கிழித்துக் கொண்டு வரும்போது ஏற்படும் ரத்தக் கசிவு மலச்சிக்கலினால் ஆசனவாயில் ஏற்படும் ரத்தக் கசிவு போன்ற இன்னும் பல காரணங்களினாலும் ரத்தக் கசிவு ஏற்படுவதுண்டு.

மிகச் சிறிய ரத்தக் கசிவுகளெல்லாம் ரத்தம் உறைந்து தானாகவே நின்றுவிடும். ஆனால், அதிக மிகப் பெரிய காயங்களால் ஏற்படும் ரத்தக் கசிவுகள் தானாகவே நிற்காது. பஞ்சு, துணி போன்றவைகளை வைத்து நன்றாக அழுத்திக் கொண்டு, உடனே மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

ரத்த வாந்தி ஒரு தடவை எடுத்தாலும் சரி, பல தடவை எடுத்தாலும் சரி, சமீபத்தில் எடுத்திருந்தாலும் சரி, பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்தாலும் சரி, உங்கள் குடும்ப டாக்டரிடம் முழு விவரத்தையும் சொல்லிவிடுங்கள். அது உங்களுக்கு சிகிச்சையளிக்க மிகவும் உதவியாக இருக்கும். தான் ரத்த வாந்தி எடுத்தது, மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைத்து மறைக்க முயற்சி செய்யாதீர்கள்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com