ரத்தத்தின் ரத்தமே... - 17

நாம் வாழும் இந்த உலகில், எத்தனை கோடி ஜீவராசிகள் வாழ்கின்றன என்பதை நம்மால் கணக்கெடுக்க முடியாது.
ரத்தத்தின் ரத்தமே... - 17

நாம் வாழும் இந்த உலகில், எத்தனை கோடி ஜீவராசிகள் வாழ்கின்றன என்பதை நம்மால் கணக்கெடுக்க முடியாது. நிலத்தில் வாழ்கின்ற பல உயிரினங்கள், வேறொரு பெயரில் நீரில் வாழ்கின்றன. அதேபோல், நீரில் வாழ்கின்ற பல உயிரினங்கள், மற்றொரு பெயரில் நிலத்தில் வாழ்கின்றன. 
நமது உடலுக்கு வெளியே பல கோடி ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வேளையில், நமது உடலுக்கு உள்ளேயே, பல லட்சம் கோடி நுண்ணுயிரிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்று சொன்னால், நீங்கள் கண்டிப்பாக நம்பமாட்டீர்கள். ஆனால் இது உண்மை. நம்பித்தான் ஆகவேண்டும்.
மற்ற விலங்குகளின் உடலைப் போலல்லாமல் நாம் நமது உடலை தெருவில் சுற்றாமல்,  வெயிலில் அலையாமல், மழையில் நனையாமல், தூசி தும்பு ஒட்டாமல், அழுக்குகள் சேராமல், குப்பையில் புரளாமல், அப்பழுக்கற்ற, நூறு சதவீதம் சுத்தமான, தங்கத்தைப் போல் மிகச் சுத்தமாக தூய்மையாக வைத்திருக்கிறோம். இருப்பினும் கணக்கிலடங்காத பல நல்ல பாக்டீரியாக்கள், பல கெட்ட பாக்டீரியாக்கள், பல நோய்க்கிருமிகள், பல நுண்ணுயிரிகள் பல்வேறு தொகுப்புகளாக, நமது ரத்தத்தில் சேர்ந்து, சேர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நமது ஜீரண மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுமார் நூறு லட்சம் கோடி நல்ல பாக்டீரியாக்கள் தான், நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன என்றுகூட சொல்லலாம். அவைகள் வாழ்வதால் தான், நாம் நல்ல சுகத்தோடு வாழ்கிறோம். லேக்டோபேசிலஸ் மற்றும் பிபிடோபாக்டீரியா போன்ற நல்ல பாக்டீரியாக்கள், நமது உடலுக்கு, குறிப்பாக நமது ஜீரண மண்டலத்துக்கு பலவித நன்மைகளை, சொல்லாமல் செய்து கொண்டிருக்கின்றன. "கல்லையும், மண்ணையும் நான் சாப்பிட்டால் கூட, எனக்கு நன்றாக ஜீரணமாகிவிடும். என் உடம்பை நான் அவ்வளவு  கரெக்டாக வைத்திருக்கிறேன்' என்று சிலர் சொல்வதுண்டு. அவருடைய ஜீரண மண்டலத்தில் இருக்கும், இந்த கோடிக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள், சரிவர வேலை செய்வதனால் தான், அவரால் இப்படி மார்தட்டி தைரியமாக சொல்ல முடிகிறது.

நமது உடலிலுள்ள மொத்த ரத்தத்தில்....

1. திரவ வடிவில் பிளாஸ்மா 2. அதிக அளவில் சிவப்பணுக்கள் 3. குறைந்த அளவில் வெள்ளை அணுக்கள் 4. மிகக் குறைந்த அளவில் பிளேட்லெட்டுகள் 5. உயிரைக் காக்கும் ஆக்ஸிஜன் 6. ஹார்மோன்கள் 7.புரதங்கள் 8. வைட்டமின்கள் 9. அனைத்து சத்துப் பொருட்கள் 10. மின் அயனிகள் 11.அதிக அளவில் தண்ணீர் (சுமார் 92 சதவீதம்) 12. கல்லீரலில் உருவாகும் அசிடோஅசிடேட் வரை சுமார் 237 பொருள்கள் 13. நல்ல பாக்டீரியாக்கள் 14. கெட்ட பாக்டீரியாக்கள் (நிமோனியா மெனிஞ்சைடிஸ் போன்றவைகளை உருவாக்கும் கிருமிகள்) 15. நோய்க்கிருமிகள் 16. வைரஸ்கள் 17. மொத்த உடலிலும் உண்டாகும் கழிவுப் பொருள்கள் இவை அனைத்தும் நமது ரத்தத்தில் தான் கலந்திருக்கின்றன.

நோய்களை உருவாக்கி மனிதனை நடைபிணமாக்கும் வைரஸ் கிருமி முதலில் தோன்றியதா, அல்லது பாக்டீரியா கிருமி முதலில் தோன்றியதா என்று கேட்டால் , கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பதற்குண்டான பதில்தான் இதற்கும் பொருந்தும். புராதனக் காலத்தில், உயிரோடிருந்த செல்களின் வழியாக இறங்கியதுதான் இந்த வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் என்று பழைய வரலாறு சொல்கிறது. சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது மனிதன் பூமியில் தோன்றுவதற்கு முன்பே வைரஸ் கிருமி இருந்ததாக ஓர் ஆய்வு கூறுகிறது.

1892 -ஆம் ஆண்டில் மித்ரி ஐவனோவ்ஸ்கி என்கிற ரஷ்ய நாட்டு தாவரவியல் நிபுணர், நோய்வாய்ப்பட்ட ஒரு தேயிலைச் செடியின் தண்டில் இருக்கும் தாவரச் சாற்றை உறிஞ்சி எடுத்து, நன்றாக செழிப்பாக வளர்ந்திருக்கும் இன்னொரு தேயிலைச் செடிக்குள் செலுத்தினார். 

உடனே நன்றாக இருந்த அந்த தேயிலைச் செடி, நோய்வாய்ப்பட்டு காய்ந்து, கருகிப் போய்விட்டது. இந்தச் செயலை வைத்து மார்டினஸ் பெய்ஜரிக் என்ற விஞ்ஞானி நன்றாக இருந்த தேயிலைச் செடி நோய்வாய்ப்பட்டு வாடி வதங்கிப் போக காரணமானது ஒரு கிருமி என்றும்; அந்தக் கிருமியின் பெயர் வைரஸ் என்றும் அழைத்தார்.

1901- ஆம் ஆண்டில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த டாக்டர் வால்டர் ரீட் என்பவர் "கொசுக்கள் தான் பலவிதமான நோய்க்கிருமிகளை மனிதனின் உடலுக்குள் புகுத்தி மனிதனுக்கு பயங்கரமான பல நோய்களை உருவாக்குகிறது' என்றார். "மலேரியா காய்ச்சல்' மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல், சிக்கன்குனியா நோய், டெங்கு காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், ஜிகா வைரஸ் காய்ச்சல் இன்னும் பலவிதமான நோய்களை ரத்தம் மூலமாக கொசுக்கள்தான் மனிதனுக்கு பரப்புகின்றன' என்றார் அவர்.

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் முதலில் நமது உடலுக்குள், கண், வாய், மூக்கு, சிறுநீர்ப்பாதை துவாரம், காயங்கள், ரணங்கள், தோலில் ஏற்படும் நாள்பட்ட மடிப்புகள், இடைவெளிகள், இவைகளில் ஏதாவதொன்றின் வழியாக உடலுக்குள்ளே புகுந்து,  ரத்தத்தில் போய் கலந்து விடுகிறது. வைரஸ் கிருமிகளை நாம் கண்ணால் பார்க்க முடியாது. அவைகள் மனித முடியின் அகலத்தைவிட சுமார் 45 ஆயிரம் மடங்கு சிறியது. வைரஸ் கிருமி உயிருள்ளதல்ல. ஆனால் நமது உடலில் உயிரோடுள்ள செல்களுக்குள் புகுந்து செல்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஆரம்பித்துவிடுகிறது.

"எனக்கு சர்க்கரை எவ்வளவு இருக்கு? ரத்த டெஸ்ட் பண்ணிப் பாருங்க. எனக்கு காய்ச்சல் அடிக்குது. மலேரியா காய்ச்சலா, டைபாய்டு  காய்ச்சலா டெங்கு காய்ச்சலான்னு தெரியல. ரத்த டெஸ்ட் பண்ணிப் பாருங்க. எனக்கு உடம்புல கொழுப்பு எவ்வளவு இருக்குன்னு ரத்த டெஸ்ட் பண்ணிப் பாருங்க. எனக்கு உப்பு எவ்வளவு இருக்குன்னு ரத்த டெஸ்ட் பண்ணிப் பாருங்க'.

இப்படி எல்லா நோய்களுக்கும், எல்லாப் பொருள்களின் அளவுகளுக்கும், நல்ல விஷயத்துக்கும் சரி, கெட்ட விஷயத்துக்கும் சரி, எல்லாவற்றுக்குமே நாம் ரத்தத்தைத் தான் நம்பியிருக்கிறோம். ஏனென்றால் உடலிலுள்ள எல்லாப் பொருள்களுமே ரத்தத்தில் தான் கலந்து இருக்கின்றன.ரத்தத்தை இரண்டு நதிகளுக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம். 

1. நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பொதிகை மலையில் உருவாகி பல்வேறு உயிரினங்களுக்கு நன்மையாக இருக்கும் பல்வேறு விதமான மிக அரிய மிகச் சிறந்த மூலிகைகளையும் மூலிகைச் சாறுகளையும் சுமந்து கொண்டு சுமார் 128 கி.மீ. நீளத்திற்கு பரந்து விரிந்து ஆறாக ஓடி வந்து வழி நெடுக குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பயன்பட்டுக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கும் வற்றாத தூய்மையான ஜீவநதி-தாமிரபரணி ஆறு.  நம் உடலில் ஓடும் ரத்தமும் இந்த தாமிரபரணி ஆறு மாதிரி நாம் நன்றாக ஆரோக்கியமாக வாழ்வதற்காக உடலுக்குத் தேவையான பல நல்ல பயனுள்ள பொருள்களை சுமந்து கொண்டு வற்றாமல் எந்நேரமும் ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது.

2. திருவள்ளூர் மாவட்டம் கேசாவரம் என்னும் ஊரில் உருவாகி சுத்தமான நீரை ஆரம்பத்தில் சுமந்து கொண்டு வந்து பின் சென்னை மாவட்டத்துக்கு உள்ளே நுழைந்து ஆடு, மாடு, மக்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், வீடுகள், குடிசைகள், மாட மாளிகைகள், மிகச் சிறிய தொழிற்சாலைகள், மிகப் பெரிய தொழிற்சாலைகள்,  சென்னை மாநகர மக்கள் தொகையின் கழிவுகள், இப்படி அனைத்து அசுத்தங்களையும் சுமந்து கொண்டு, சென்னை மாநகரின் உள்ளே சுமார் 60 கி.மீ. வளைந்து, நெளிந்து ஓடி, நேப்பியர் பாலம் அருகே, கடலில் கலக்கும் மாசுக்களின் மொத்த உருவமான நதி-கூவம் நதி. நம் உடலில் ஓடும் ரத்தமும் இந்த கூவம் நதி மாதிரி, நோய்க் கிருமிகளையும் அழுக்குகளையும், கழிவுகளையும் சுமந்து கொண்டு சிறுநீரகம் கல்லீரல் வழியாக உடலிலிருந்து வெளியேற்றி நாம் ஆரோக்கியமாக வாழ எந்நேரமும் ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஒன்று ஜீவநதி. இன்னொன்று கூவநதி. ஆனால் இவ்விரண்டு நதிகள் செய்யும் வேலைகளையும் சளைக்காமல், அவரவர் உடலுக்குள், வற்றாமல் ஓடிக்கொண்டு ஆயுள் முழுக்க சேவை செய்து கொண்டு நம்மை நல்ல சுகத்துடன் வாழவைத்துக் கொண்டிருக்கும் ரத்தமும் ஒரு ஜீவநதிதான்.   

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com