அகழ்வாராய்ச்சியில் நகர நாகரீகம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் நகர நாகரீகத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் வடிகட்டியுடன் கூடிய நீர் செல்லும் குழாய் அமைப்புகள் மற்றும் உறைகிணறுகள் கண்டு பிடிக்கப்பட்
அகழ்வாராய்ச்சியில் நகர நாகரீகம்


சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் நகர நாகரீகத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் வடிகட்டியுடன் கூடிய நீர் செல்லும் குழாய் அமைப்புகள் மற்றும் உறைகிணறுகள் கண்டு பிடிக்கப்பட்ட செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றோம். தொன்மைச் சிறப்புமிக்க ஆதிச்ச நல்லூர் கொற்கை போன்ற ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் நீர் செல்லும் குழாய்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

மனித இனத்திற்கு மிகவும் தேவையானதாக விளங்கும் சுத்தமான குடிநீரை தண்ணீரை பெறுவதற்கும் கழிவு நீரை அகற்றவும் "சுருங்கை' எனப்படும் குழாய்களும் கழிவு நீர் அகற்றும் வாய்க்கால்களும் இருந்திருக்கின்றன. இலக்கியங்களிலும் இது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

சங்க இலக்கியமான பரிபாடலில் குழாய்கள் நிலத்தின் அடியில் நீண்ட யானையின் துதிக்கை போல அமைந்திருந்ததாக குறிக்கப்படுகிறது.

அருவி சொரிந்த தியிற்றுரந்து
நெடுமால் சுருங்கை நடுவழிப்போந்து
கடுமாகி களிறணத்துக் கைவிடு நீர் போலும்

(பரிபாடல் 20 : 14-106)

நீர் செல்லும் குழாய் அமைப்பு "சுருங்கை' என அழைக்கபடுகிறது. அரண்மனையின் மாடிமேல் நிலா முற்றம் அமைந்திருந்தது. அம்முற்றத்தின் மேலாக பெய்த மழைநீர் கீழே விழுவதற்கு மீன் வாயைப் போன்ற அம்பணங்கள் (தூம்புகள்) அமைக்கப்பட்டிருந்ததாக நெடுநல்வாடை (96) கூறுகிறது. நீர்செல்லும் "சுருங்கை' பற்றி மதுரைக் காஞ்சியும் குறிப்பிடுகிறது.


கல்லிடித்தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின்
நல்லெயிலுடிந்த செல்வத்தம்மின் (730-31)

மேலும் "சுருங்கை' அமைப்பினைப் பற்றி சிலம்பு, மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.

இலக்கியங்கள் குறிப்பிடும் செய்திகளை அகழ்வாராய்ச்சிகள் சான்றுகளுடன் மெய்ப்பிக்கின்றன.

சுடுமண்ணால் ஆன குழாய்வகை நீர்க்கால்கள் திருக்கோவிலூர் (விழுப்புரம் மாவட்டம்) ஊத்தங்கரை (தர்மபுரி மாவட்டம்) சென்னை-நங்கநல்லூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.

இவ்வகை குழாய்களில் ஒரு முனை சற்று குறுகலாகவும் மறுமுனை அகலமாகவும் இருக்கும். குழாய்களை ஒன்றுக்குள் ஒன்று சொருகிவிடலாம். களிமண் பூச்சு தேவையிருக்காது. மேலும் இவை துணிகளுக்கு வண்ண சாயமேற்றும் பணிகளுக்காக இவை பயன்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் "சுருங்கை' எனப்படும் நீர் செல்லும் குழாய்கள் கிடைத்துள்ளன. அரிக்கமேடு, வசவசமுத்திரம் திருக்கோவிலூர், உறையூர் உலகடம் (ஈரோடு மாவட்டம்) போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. உலகடத்தில் கிடைத்த குழாய்களின் மீது எண்கள் (கி.பி. 10-11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை) தமிழ் எண்கள் இடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தரைக்கு கீழே நீர் செல்லக் கூடிய வடிகால்கள், படைவீடு, கண்ணனூர், கங்கை கொண்ட சோழபுரம், கரூர் போன்ற தொன்மைச் சிறப்புமிக்க இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வாராய்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சிறந்த நகர நாகரீகம், சிறப்பான நிலையில் இருந்ததற்கான சான்றுகளாக (சுருங்கை) சுடுமண் குழாய்களும், வடிகால்களும் விளங்குகின்றன!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com