சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் "கங்குபாய் காட்யவாடி'. ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 1960-களில் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்த கங்குபாய் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், படத்தைத் திரையரங்கில்தான் வெளியிட வேண்டும் என்பதில் சஞ்சய் லீலா பன்சாலி உறுதியாக இருந்துவந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் "கங்குபாய் காட்யவாடி' படம் திரையரங்குகளில் வரும் ஜனவரி 6-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு மறுநாளான ஜனவரி 7-ஆம் தேதியன்று ராஜமெளலி இயக்கியுள்ள "ஆர்ஆர்ஆர்' படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு தற்போது "கங்குபாய் காட்யவாடி' படம் ஒரு மாதம் தள்ளி வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் படக்குழுவினரின் இந்த அறிவிப்புக்கு இயக்குநர் ராஜமெளலி நன்றி தெரிவித்துள்ளார்.