காளையப்பா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "மதுரை மணிக்குறவன்'. ஹரிகுமார், மாதவி லதா, சுமன், ராதாரவி, கௌசல்யா, சரவணன், சுஜாதா, எம்.எஸ். பாஸ்கர், கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், அஸ்மிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார் ராஜரிஷி. மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலும் பல கொலைக்குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும் உண்மைச்சம்பவங்களின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது. ""சந்தர்ப்பமும் சூழலும் எல்லோரையும் இடம் மாற்றும். எல்லோருக்கும் வாழ்க்கையில் ரெண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். ஆனால், வாழ்க்கையில் எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற வழிதான்.
இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம் என்பது இதில் இல்லை. இதில் வருகிற கதை நாயகன் தேர்ந்தெடுக்கிற வழிதான் முக்கியமானது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாம் இருந்துக் கொண்டே இருக்கிறது . கொஞ்ச சதவீதம் கூடிக் குறைந்து இருந்தால் நாமே நல்லவன், கெட்டவன் என்று பிரித்து சொல்லி விடலாம். கெட்டவனாக இருந்தவனை நல்லவனாக ஆக்குவதற்கான முயற்சியும், அவனை வேறு திசைக்கு கொண்டு போகிற முயற்சியும் இங்கே நடக்கிறது. அப்படிப்பட்டவனை ஒரு சூழல் தெளிவு நிலைக்கு கொண்டு வருகிறது. வாழ்வில் எல்லாமும் போன பின்பு, அன்புக்கு மட்டுமே நிஜமாக இருப்போம் என்று போகிற இடங்களும் வருகிறது'' என்றார் இயக்குநர். இளையராஜா இசையில் முத்துலிங்கம் பாடல்களை எழுதுகிறார்.