கடந்த 13 வருடங்களாக பல வெற்றிப் பாடல்களை பாடி நாட்டுப்புறம் மற்றும் திரைப்பட பாடல்களில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பாடகர் வேல்முருகன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
இதுவரை பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள அவர் "பழைய வண்ணாரப்பேட்டை', "திரெளபதி' உள்ளிட்ட படங்களில் பாடல்களில் மட்டுமே இதுவரை நடித்து வந்த வேல்முருகன் தற்போது குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வர உள்ளார். ப்ரஜன் நடிக்கும் சங்கரலிங்கத்தின் "சைக்கிள் வண்டி' மிர்ச்சி சிவா நடிப்பில் "சலூன்', "படைப்பாளன்', "அன்னக்கிளி ஆர்கெஸ்ட்ரா', யோகி பாபுவுடன் இன்னும் பெயரிடப்படாத படம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். "வேலன்', "காஞ்சனா' உள்ளிட்ட படங்களில் பாடல்களை எழுதியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
இனி பாடல், நடிப்பு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துவேன். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். பாடகராக எனக்கு அங்கீகாரம் அளித்தது போல், நடிகனாகவும் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது. எனது குரலை ஏற்றுக்கொண்டது போல் எனது நடிப்பையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் வேல்முருகன்.