"இன்ஷா அல்லாஹ்' என்கிற இரு சொற்கள் இஸ்லாமியர்களின் வாழ்க்கையுடன் பின்னணிப் பிணைந்தவை. "இறைவன் விரும்பினால்' என்று பொருள்படும் இச்சொற்களையே தலைப்பாகச் சூட்டி, "இஸ்லாமிய வாழ்க்கை முறையை' பேசும் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன். இவரை, "உலக சினிமா' பாஸ்கரன் என்று சொன்னால் சினிமா வட்டத்தில் தெரியும்.
உலகம் முழுவதும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்று கவனம் ஈர்த்துள்ளார். இயக்குநர் பேசும் போது... " தமிழ் இஸ்லாமியர்களைப் பற்றி, ஒரு முழுமையான திரைப்படம் தமிழ்
சினிமாவில் வரவில்லை. இது, தமிழ் நாட்டில் வாழும் 42 லட்சம் இஸ்லாமிய மக்களின் மனக்குறை மட்டுமல்ல, சினிமாவை நேசிக்கும் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பும்தான். அதை நிறைவு செய்யவும் இஸ்லாமியர் வாழ்க்கைமுறையை அனைத்து சமூக
மக்களும் அறிந்துகொள்ளும் வகையிலும் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். மறைந்த இலக்கிய மேதை தோப்பில் முகம்மது மீரான் எழுதிய "அன்பிற்கு முதுமையில்லை' என்கிற சிறுகதையையும் எழுத்தாளர் பிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதிய "ரணம்' என்கிற சிறுகதையும் அற்புதமாக இணையும் புள்ளியைக் கண்டேன். எனவே, அந்த இரு சிறுகதைகளையுமே வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது' என்றார்.