ரத்தத்தின் ரத்தமே... - 37

பொதுவாக எந்த மனிதரையும் பார்த்து இரண்டு கேள்விகள் கேளுங்கள். தினமும் மலச்சிக்கல் இல்லாமல் பொழுது விடிகிறதா?
ரத்தத்தின் ரத்தமே... - 37


பொதுவாக எந்த மனிதரையும் பார்த்து இரண்டு கேள்விகள் கேளுங்கள். தினமும் மலச்சிக்கல் இல்லாமல் பொழுது விடிகிறதா? மனச்சிக்கல் இல்லாமல் முடிகிறதா? என்று கவிப்பேரரசு வைரமுத்து தனது உரையில், மனிதனாகப் பிறந்த எல்லோரையும் கேட்கச் சொல்லியிருக்கிறார். அவர் கேட்கச் சொன்னவை நூற்றுக்கு நூறு சரியே. இந்த இரண்டு பிரச்னைகளும் இல்லாமல் ஒருவர் வாழ்ந்தால், அவரை கொடுத்து வைத்தவர், கோடீஸ்வரர், தனவந்தர், செல்வந்தர், பாக்கியவான், அருளாளர், புண்ணியவான், ஆரோக்கியவான் இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆசனவாய் வழியாக ரத்தம் வருவதற்கு முதல் காரணமும் முக்கிய காரணமும் மலச்சிக்கல்தான். நாம் விரும்பி சாப்பிட்ட விதவிதமான உணவுகளிலுள்ள சத்துப் பொருட்களும் மற்ற பொருட்களும் உடலால் உறிஞ்சப்பட்டு, மிச்சமான சக்கைப்பொருள், (கழிவுப்பொருள்) உணவுப்பாதையின் கடைசிப் பகுதியாகிய மலக்குடலுக்கு வந்து சேருகிறது. கடைசியாக மலக்குடலுக்கு வந்து சேர்ந்த இந்த சக்கைப் பொருள், இந்தக் கழிவுப்பொருள், எப்பொழுதுமே சற்று ஈரப்பதத்துடன் தான் இருக்கும். இருக்கணும். அப்பொழுதுதான் வயிறு சுத்தமாக காலியாவதற்கு சுலபமான வாய்ப்பு ஏற்படும். பல்வேறு காரணங்களால்  மலம் அதாவது கழிவுப்பொருளிலுள்ள லேசான ஈரப்பதம், சுத்தமாக இல்லாமற் போய்விட்டால், மலம் உலர்ந்துபோய் மிகவும் கடினமாகிவிடும். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மலம் ஆசனவாய் வழியாக வெளியே வருவதற்கு மிகவும் கஷ்டப்படும். இம்மாதிரி கஷ்டமான நேரத்தில், நாம் மூச்சைப் பிடித்து, முக்கி, அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுப்போம். உடனே, ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்துபோய் மிகக் கடினமாகி இருக்கும் மலம், மலக்குடலின் ஓரத்தையும், ஆசனவாயின் ஓரங்களையும் கிழித்துக் கொண்டு, பிய்த்துக் கொண்டு வெளிவரும். இந்த நேரத்தில் கிழிந்துபோன குடலின் ஓரங்களிலிருந்து பச்சை ரத்தம் வரத்தானே செய்யும் இதைப் படிக்கும்போது உங்கள் மனது கஷ்டப்படுகிறதா? என்ன செய்வது வேறு வழியில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். 

இவ்வாறாக, ஒரு நாள், இரண்டு நாள் நடைபெற்றுக் கொண்டிருந்தால் பரவாயில்லை. தாங்கிக் கொள்ளலாம். தினமும்,  இது நடந்து கொண்டிருந்தால் அந்தக் குடலின் ஓரம், அந்த ஆசனவாயின் ஓரம் கொஞ்சம் கொஞ்சமாக புண்ணாகி, எப்பொழுதுமே ரத்தம் வருகிற நிலைக்கு கொண்டுபோய் விட்டுவிடும்.

ஆசன வாய் வழியாக ரத்தம் வரும் நோயாளிகளின் வயது என்ன? ரத்தம் வருவதற்கு வயது வரம்பெல்லாம் கிடையாது. எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக, முதியவர்களுக்குத் தான் அதிகமாக இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ஆனால் இப்பொழுதெல்லாம் நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே, இந்தப் பிரச்னையோடு தவிப்பவர்கள் அதிகம் ஆகிவிட்டார்கள். உலகிலுள்ள மொத்த  ஐனத்தொகையில் சுமார் 25 சதவீதம் பேர் இந்தப் பிரச்னையோடுதான் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, உலகிலுள்ள மொத்த ஐனத்தொகையில் 10 சதவீதம் பேர், மூலநோய் மற்றும் ஆசனவாயில் பிளவு ஆகிய இரண்டு பிரச்னைகளினாலும் பாதிக்கப்பட்டு, வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சில உணவுகளும் சில மருந்துகளும் கூட உங்கள் மலத்தின் நிறத்தை மாற்றிக் காட்டும். இதைக் கண்டு நீங்கள் பயந்து விடக் கூடாது. தவறான முடிவெடுத்துவிடக் கூடாது. பழுப்பு, பச்சை, மஞ்சள், கறுப்பு நிறங்களில் மலம் வெளிவர வாய்ப்புண்டு. சில சமயங்களில் அதிக அளவில் பித்தநீர் செரிமாணம் ஆகிக்கொண்டிருக்கும் உணவோடு சேர்ந்தால், அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் மலம் வெளிவர வாய்ப்புண்டு. சில ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தொடர்ந்து அதிக நாட்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், மலம் நிறம் மாறி வெளிவர வாய்ப்புண்டு. இன்றைய இளம் தலைமுறையினரை, அதிக அளவில் கெடுத்துக் கொண்டிருக்கும், அதிக நிறமிகள் சேர்க்கப்பட்ட கலர் கலர் துரித உணவுகளை சாப்பிட்டால், அந்தந்த கலர்களில் மலம் வெளிவர வாய்ப்புண்டு. 

உலகெங்கிலும் சுமார் 2500 முதல் 3000 வரை செயற்கை உணவு வண்ணப் பொருட்கள், பல்வேறு உணவு தயாரிப்புகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதில் எது நல்லது? எது கெட்டது? எது உடலுக்கு தீங்கு விளைவிக்காதது? என்றெல்லாம் பார்த்து, கேட்டு, யாரும் சாப்பிடுவதில்லை. இயற்கை உணவுக்கு செயற்கை வண்ணத்தை கொடுக்கும் நிறமிப் பொருட்கள் அனைத்துமே தீங்கானதுதான். ஊன் புரதப்பசையில் தயாரிக்கப்பட்ட மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டால் கூட மலம் கறுப்பாக வெளிவர வாய்ப்புண்டு. எனவே, மலம் கலராக வெளிவந்தால் ரத்தம் மட்டும்;தான் காரணம் என்று முடிவு பண்ணிவிடாமல், அன்று என்ன சாப்பிட்டோம் என்பதையும் நினைத்துப் பார்த்து முடிவெடுங்கள்.

டாய்லெட் உடனே போயாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் நான் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தாலும் சரி, நடுக்கடலில் போய்க் கொண்டிருக்கும் அந்தக் கப்பலையே திருப்பச் சொல்லி கரைக்கு விடச் சொல்வேன். அதனால் என்ன ஆனாலும் சரி, எவ்வளவு செலவானாலும் சரி எனக்கு வயிறு உடனே காலியாக வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம் என்று டாய்லெட் போவதன் அவசரத்தை, முக்கியத்துவத்தை இப்படி நகைச்சுவையாகச் சொல்வார் எனது சிங்கப்பூர் கப்பல் அதிபர் நண்பரொருவர். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு மனிதருக்கும், மிகமிக முக்கியமான காரியம் ஆகும். அதற்கு நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை தினமும் உணவில், அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு, பெண்ணுக்கு சுமார் 25 லிருந்து 31 கிராம் வரையும், ஆணுக்கு சுமார் 30லிருந்து 38 கிராம் வரையும் அளவுள்ள நார்ச்சத்து உணவுகள் உடலுக்கு தேவை.

தண்ணீர் தினமும் நிறைய குடிக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடனே, இன்று வயிறு சுத்தமாக காலியாகிவிட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். அப்படி நினைத்துக் கொண்டேயிருந்தால் வயிறு கண்டிப்பாக காலியாகிவிடும். முன்னால் இரவு லேட்டாக சாப்பிட்டிருந்தால் மறுநாள் காலை டாய்லெட் போக லேட்டாகும். எனவே இரவில் முடிந்தவரை 8 மணியளவில் இரவு உணவை முடிக்கப் பாருங்கள். பெரும்பாலான ஐப்பானியர்கள் இரவு உணவை 7 மணிக்கெல்லாம், முடித்துவிடுவார்கள். சீக்கிரம் ஜீரணம் ஆகாத உணவுகளை, வெளி உணவுகளை இரவில் சாப்பிடுவதைத் தவிருங்கள்.

ஆசனவாய் வழியாக ரத்தம் வடிவதை நிறுத்த, நீங்கள் செய்ய வேண்டியது என்னென்ன? 

1.இந்தப் பிரச்னை ஏற்பட்டுவிட்டால், இதற்கு முன்பு குடித்துக் கொண்டிருந்த தண்ணீரின் அளவைவிட மிக அதிகமாக (ஒரு நாளைக்கு 3 லிட்டருக்குக் குறையாமல்) தண்ணீர் குடிக்க வேண்டும். 

2.ஆசனவாய்ப் பகுதியை ஒழுங்காகக் கழுவி,  சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். 

3.டாய்லெட் போவதற்கு அதிக சிரமம், அதிக கஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

4.டாய்லெட் போக அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது. போனோமா, வந்தோமா என்றிருக்க வேண்டும். சிலர் அன்றைய நாளிதழை டாய்லெட்டுக்குள் எடுத்துக் கொண்டு போய் படித்துவிட்டுத்தான் வெளியே வருகிறார்கள். இது சரியல்ல.

5. மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளை குறைக்க வேண்டும். 

6.பச்சைப் பட்டாணி, காராமணி, ஓட்ஸ், பாப்கார்ன், பழுப்பரிசி, கோதுமை ரொட்டி, பாதாம், பிஸ்தா, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காலிப்ளவர், கேரட், பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி பழம், ப்ராக்கோலி காய்கறி, உருளைக்
கிழங்கு, பீட்ருட், தாமரைத்தண்டு, வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

8. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது.

9.தினமும் காலையில் வயிற்றை சுத்தமாக சுலபமாக க்ளீன் பண்ணிவிடும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும்.

10. துரித உணவுகள், கலர் கலர் உணவுகள், காரம் அதிகமுள்ள உணவுகள், ரசாயனத் தூள் சேர்த்து தயாரிக்கப்பட்ட கலப்பட உணவுகளை தவிர்க்க வேண்டும். 

11. அசைவ உணவுகள் அடிக்கடி சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். 

12. ஜீரணம் நன்றாக ஆகுமாறு உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். கண்டதையும் சாப்பிடக் கூடாது. 

13. ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடக் கூடாது.

14. வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

15. நீங்கள் புதிதாக சாப்பிடும் மருந்து மாத்திரைகள் உங்களுக்குத் திடீரென மலச்சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக உங்களுக்குத் தோன்றினால உங்கள் டாக்டரிடம் கலந்து பேசி மருந்துகளை மாற்றித் தரச் சொல்லுங்கள்.

"காயமே இது பொய்யடா,
 வெறும் காற்றடைத்த பையடா,
 மாயனாராம் குயவன் செய்த
 மண்பாண்டம் ஓடடா'... 

என்று "குமுதம்' தமிழ்த்திரைப்படத்தில், நகைச்சுவையாக  ஒரு பாடல் பாடப்படும். வெறும் காற்றடைத்த பை போலத்தான் நமது உடலும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. மிகவும் பிடித்தமான மிகவும் ருசியான மிகவும் விலையுயர்ந்த பாதாம் அல்வா கூட ரசித்து ருசித்து எவ்வளவு சாப்பிட்டாலும் தொண்டை வரைதான்  நமக்கு அதன் ருசி, அருமை பெருமை எல்லாம் தெரியும். அதற்குப் பிறகு எல்லா உணவுகளையும் போல அதுவும் ஒரு சக்கைப் பொருள், ஒரு கழிவுப் பொருளாகத் தான் மாறப்போகிறது. இதற்கு ஏன் இத்தனை போராட்டம், அடிதடி ஆர்ப்பாட்டம்? இதில், அசிங்கம் பார்த்துக் கொண்டு, உடலுக்குள் நோயை ஒளித்து வைத்துக் கொண்டு வாழ்வது, காலத்தை கடத்துவது வீண். மலச்சிக்கல், மூலநோய் ஆசனவாய் வழியாக ரத்தம் வடிவது போன்ற பிரச்னைகள் ஒருவருக்கு இருந்தால், அவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி உடனடியாக உங்கள் குடும்ப டாக்டரை சந்தித்து மருத்துவ ஆலோசனைகளையும், தகுந்த சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்வது மிகமிக நல்லது.

"நோய் வரும் வரை உண்பவன்...... உடல் நலமாகும் வரை ........ உண்ணாதிருக்க வேண்டிவரும்'.

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com